spot_img
July 27, 2024, 8:30 am
spot_img

கணவனை இழந்த பெண்மணிக்கு ரூபாய் 10 லட்சம்  வழங்க இன்சூரன்ஸ் நிறுவனத்துக்கு நாமக்கல் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவு

கோயம்புத்தூர், ராமன் குட்டை, சத்தி சாலையில் உள்ள சர்க்கார் சாம குளத்தில் வசித்து வருபவர் சசிகுமார் மனைவி எஸ். ஜோதிமணி (42).  இவரும் இவரது கணவரும் கடந்த 2019 நவம்பர் மாதத்தில் குன்னத்தூரில் உள்ள சிட்டி யூனியன் வங்கியில் கடன் பெற்றுள்ளார்கள். அப்போது வங்கியின் பரிந்துரையின்படி பஜாஜ் அலையன்ஸ் லைப் இன்சூரன்ஸ் நிறுவனத்தில் ரூ 10,122/- பிரிமியம் செலுத்தி  கடனுக்கு இன்சூரன்ஸ் செய்துள்ளனர். 

இந்நிலையில் உடல்நிலை சரியில்லாமல் ஜோதி மணியின் கணவர் சசிகுமார்   கடந்த 2021 அக்டோபர் மாதத்தில் இறந்து விட்டார். இதனை தெரிவித்து காப்பீட்டு தொகை   ரூபாய் ஒன்பது லட்சத்தை வழங்குமாறு ஜோதிமணி இன்சூரன்ஸ் நிறுவனத்துக்கு விண்ணப்பம் செய்துள்ளார். ஆனால், இறந்தவருக்கு சிறுநீரகக் கோளாறு மற்றும் ரத்த அழுத்தம் இருந்ததாகவும் அதனை மறைத்து காப்பீட்டை அவர் பெற்றுவிட்டதாகவும் இதனால் காப்பீட்டுத் தொகையை வழங்க முடியாது என்று காப்பீட்டு நிறுவனம் தெரிவித்துள்ளது.

காப்பீட்டு தொகை ரூபாய் 9 லட்சத்தை வழங்குமாறு ஜோதிமணி கடந்த 2023 ஜனவரி மாதத்தில் கோயம்புத்தூர் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தார். இந்த வழக்கானது விரைவான விசாரணைக்காக கடந்த பிப்ரவரி மாதத்தில் நாமக்கல் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்திற்கு மாற்றம் செய்யப்பட்டது. 

இரு தரப்பு வாதங்களை கேட்ட நாமக்கல் மாவட்ட நுகர்வோர் நீதிமன்ற நீதிபதி டாக்டர் வீ. ராமராஜ் தலைமையிலான அமர்வு கடந்த செவ்வாய்க்கிழமை வழங்கிய தீர்ப்பில் இறந்து போனவருக்கு சிறுநீரக மற்றும் ரத்த அழுத்த பாதிப்புகள் இருந்ததாக கூறப்படுவதற்கு இன்சூரன்ஸ் நிறுவனம் எவ்வித சாட்சியங்களையும் முன்வைக்காததால் அந்த நிறுவனத்தின் வாதம் ஏற்புடையது அல்ல என்று தெரிவித்து காப்பீட்டுத் தொகையை வழங்காதது நிறுவனத்தின் சேவை குறைபாடு என்று கூறியுள்ளது.

வழக்கு தாக்கல் செய்த பெண்ணுக்கு அவரது கணவரின் இறப்புக்கான காப்பீட்டுத் தொகை ரூபாய் ஒன்பது லட்சத்தையும் சேவை குறைபாட்டால் ஏற்பட்ட சிரமங்களுக்கு இழப்பீடாக ரூபாய் ஒரு லட்சத்தையும் நான்கு வாரங்களுக்குள் வழக்கு தாக்கல் செய்தவரின் கணவர் இறந்த நாள் முதல் ஆண்டு ஒன்றுக்கு ஒன்பது சதவீத வட்டி சேர்த்து வழங்க வேண்டும் என்று காப்பீடு நிறுவனத்துக்கு நாமக்கல் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நுகர்வோர் பூங்கா
நுகர்வோர் பூங்கா
நுகர்வோர் பூங்காவின் படைப்பு

தொடர்புடைய கட்டுரைகள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -Central Learning campus

சமீபத்திய கட்டுரைகள்