spot_img
June 30, 2025, 1:17 am
spot_img

குழந்தையின் தலையில் காயங்களை ஏற்படுத்திய மருத்துவர், நான்காண்டு கழித்து இழப்பீட்டு கோரிக்கையை தள்ளுபடி செய்த இன்சூரன்ஸ் நிறுவனம், சேவை குறைபாடு புரிந்த தண்ணீர் சுத்திகரிப்பான் நிறுவனம் (வாட்டர் பியூரிஃபையர்), பணத்தைப் பெற்றுக் கொண்டு வெப் டெவலப் செய்து தராத வெப் டெவலப் நிறுவனம்

அலட்சியமான மருத்துவ சிகிச்சை: பிரசவத்தின் போது குழந்தையின் தலையில் காயங்களை ஏற்படுத்திய மருத்துவர் இழப்பீடாக ரூபாய் 10 லட்சம் வழங்க உத்தரவு

ஆந்திர பிரதேச மாநிலம் நெல்லூரில் வசிக்கும் கே. பிரேமலதா என்பவர் நெல்லூரில் இருக்கும் மருத்துவமனை ஒன்றில் டாக்டர் பி யசோதரா என்பவரிடம் பிரசவத்துக்காக கடந்த 2011 ஏப்ரல் 16 அன்று அனுமதிக்கப்பட்டுள்ளார். சிசேரியன் மூலம் குழந்தை   பெற்றுக்கொள்ள விருப்பம் தெரிவித்த போதிலும் மருத்துவர் கட்டாயப்படுத்தி இயற்கையான வகையில்   வைத்தியம் பார்த்து பிரசவம் பார்த்தார் என்றும் குழந்தை பிறந்த பின்பு குழந்தையின் தலையில் மிகுந்த காயங்கள் இருந்தன (causing scalp injuries) என்றும் இதற்கு மருத்துவரின் அலட்சியமான மருத்துவ சிகிச்சையே காரணம் என்றும் மருத்துவர் மீது ஆந்திர பிரதேச நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் வழக்கு தாக்கல் செய்தார். மருத்துவர் அலட்சியமாக (medical negligence) செயல்பட்டு மருத்துவ சிகிச்சை வழங்கியுள்ளார் என்பதை உறுதி செய்து பாதிக்கப்பட்டவருக்கு இழப்பீடு வழங்குமாறு மாநில நுகர்வோர் ஆணையம் உத்தரவிட்டது. 

மாநில நுகர்வோர் ஆணையத்தின் தீர்ப்பை எதிர்த்து தேசிய நுகர்வோர் ஆணையத்தில் மருத்துவர் மேல்முறையீடு தாக்கல் செய்திருந்தார். மருத்துவரின் மேல்முறையீட்டை விசாரித்த விசாரித்த தேசிய ஆணையம் மருத்துவர் அலட்சியமாக சிகிச்சை வழங்கியுள்ளார் என்பதை உறுதி செய்ததோடு பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு சிகிச்சைக்கு ஏற்பட்ட செலவு தொகை ரூ 72,530/-, மருத்துவ அலட்சியத்துக்கு இழப்பீடாக ரூபாய் 10 லட்சம் மற்றும் வழக்கின் செலவு தொகை ரூ 50,000/- ஆகியவற்றை மருத்துவர் வழங்க வேண்டும் என்று கடந்த 2025 ஜூன் 6 அன்று உத்தரவிட்டுள்ளது. (Order in First Appeal 628 of 2019, dated 06-06-2025, before NCDRC, New Delhi).

நான்காண்டு கழித்து இழப்பீட்டு கோரிக்கையை தள்ளுபடி செய்த இன்சூரன்ஸ் நிறுவனம் நுகர்வோருக்கு இழப்பீடாக ரூபாய் 3 கோடியே 14,96,268/- ஐ வழங்க தேசிய நுகர்வோர் ஆணையம் உத்தரவு

நேஷனல் பல்க் கேண்டிலிங் கார்ப்பரேஷன் என்ற நிறுவனத்துக்கு சொந்தமாக உணவு தானியங்களை சேமித்து வைக்கும் கிடங்கு ஒன்று உள்ளது. இவ்வாறு வைக்கப்படும் உணவு தானியங்களுக்கு பாதிப்பு ஏற்பட்டால் காப்பீட்டுத் தொகையை பெறும் வகையில் நேஷனல் இன்சூரன்ஸ் நிறுவனத்திடம் பிரிமியம் செலுத்தி காப்பீட்டு பாலிசி ஒன்றை நேஷனல் பல்க் கேண்டிலிங் கார்ப்பரேஷன் பெற்றிருந்தது.  கிடங்கில் ஏற்பட்ட திடீர் தீ விபத்து மற்றும் அதன் தொடர்ச்சியான திருட்டு காரணமாக ஏற்பட்ட இழப்புக்கு காப்பீட்டு பாலிசி வழங்கி இருந்த நேஷனல் இன்சூரன்ஸ் கம்பெனியிடம் நேஷனல் பல்க் கேண்டிலிங் கார்ப்பரேஷன் நிறுவனமானது இழப்பீடு கேட்டு கோரிக்கையை (claim application) தாக்கல் செய்துள்ளது. இந்த விபத்தில் ஏற்பட்ட இழப்பின் மதிப்பு ரூ 3,14,96,268 என்று இன்சூரன்ஸ் நிறுவனத்தின் சர்வேயர் மதிப்பீடு செய்து அறிக்கை தாக்கல் செய்துள்ளார். 

இன்சூரன்ஸ் நிறுவனமானது வேறு காரணங்களை கூறி இழப்பீட்டுத் தொகையை வழங்க மறுத்து இழப்பீட்டு கோரிக்கையை நான்காண்டுகள் கழித்து தள்ளுபடி செய்துள்ளது. இதனை தொடர்ந்து தாக்கல் செய்யப்பட்ட வழக்கை விசாரித்த தேசிய நுகர்வோர் ஆணையம் வழங்கிய தீர்ப்பில் நான்காண்டுகள் கழித்து இழப்பீட்டு கோரிக்கையை தள்ளுபடி செய்வது சேவை குறைபாடு என்று தெரிவித்துள்ளது. நான்காண்டு கழித்து இழப்பீட்டு கோரிக்கையை தள்ளுபடி செய்த இன்சூரன்ஸ் நிறுவனம் நுகர்வோருக்கு இழப்பீடாக ரூபாய் 3 கோடியே 14,96,268/- ஐ வழங்க தேசிய நுகர்வோர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. (Order in C.C. No. 3687 of 2017, dated 22-05-2025, before NCDRC, New Delhi).

சேவை குறைபாடு புரிந்த தண்ணீர் சுத்திகரிப்பான் நிறுவனம் (வாட்டர் பியூரிஃபையர்) நுகர்வோருக்கு இழப்பீடு வழங்க உத்தரவு

வீட்டில் பயன்படுத்த ரூ 10, 200/- செலுத்தி வாங்கிய தண்ணீர் சுத்திகரிப்பான் (வாட்டர் பியூரிஃபையர்) நுகர்வோருக்கு வீட்டில் அந்த உபகரணத்தை சரியாக பொருத்திக் கொடுக்காததால், அந்த உபகரணம் இயங்கவில்லை. இந்த நிலையில் இது குறித்து பலமுறை அந்த உபகரணத்தின் தயாரிப்பு நிறுவனத்தில் புகார் செய்தும் எவ்வித நடவடிக்கையும் அந்த நிறுவனம் மேற்கொள்ளவில்லை. இதனால் பாதிக்கப்பட்ட நுகர்வோர் எர்ணாகுளம் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில் தண்ணீர் சுத்தகரிப்பான் இயந்திரத்தை தயாரித்த நிறுவனத்தின் (Eureka Forbes Aquaguard & its service provider) மீது வழக்கு தாக்கல் செய்தார். தண்ணீர் சுத்திகரிப்பான்  இயந்திர உற்பத்தி நிறுவனம் நுகர்வோருக்கு உடனடியாக புதிய இயந்திரத்தை மாற்றித் தருமாறும் (replace) அல்லது நுகர்வோர் செலுத்திய பணத்தை திருப்பித் தருமாறும் (refund) இழப்பீடாகவும் வழக்கின் செலவு தொகையாக ரூ 10,000/- ஐ வழங்குமாறும் உத்தரவிட்டுள்ளது (Order in C.C. No: 927 of 2023 dated 28-05-2025, before DCDRC, Ernakulam).

பணத்தைப் பெற்றுக் கொண்டு வெப் டெவலப் செய்து தராத வெப் டெவலப் நிறுவனம் இழப்பீடு வழங்க உத்தரவு

மொபைல் அப்ளிகேஷன் ஒன்றை உருவாக்குவதற்காக வெப் டெவலப்பிங் நிறுவனம் ஒன்றுக்கு ஒருவர் பணம் செலுத்தியுள்ளார். பணம் முழுவதையும் பெற்றுக்கொண்டா வெப் டெவலப்பிங் நிறுவனம் உரிய காலத்துக்குள் வெப் டெவலப் செய்து தராதோடு சரியான பதிலையும் வழங்கவில்லை. இதனால், பாதிக்கப்பட்ட நுகர்வோர் டெல்லி மாநில நுகர்வோர் ஆணையத்தில் வெப் டெவலப்பர் மீது வழக்கு தாக்கல் செய்துள்ளார். வெப் டெவலப்பரின் செயல்பாடு சேவை குறைபாடு உடையது என்றும் பெற்ற பணத்தை உடனடியாக திருப்பிக் கொடுக்க வேண்டும் என்றும் சேவை குறைபாட்டிற்கு இழப்பீடாகவும் வழக்கின் செலவு தொகையாகவும் ரூ 1,50,000/- ஐ நுகர்வோருக்கு வெப் டெவலப்பிங் நிறுவனம் செலுத்த வேண்டும் என்றும் மாநில நுகர்வோர் குறைதீரு ஆணையம் விசாரணைக்கு பின்பு உத்தரவிட்டுள்ளது. (Order in C.C. No: 891 of 2015 dated 18-06-2025, before SCDRC, Delhi).

நுகர்வோர் பூங்கா (The Consumer Park) கருத்து: 2011 ஆம் ஆண்டில் குழந்தை பிரசவத்தில் ஏற்பட்ட குறைபாட்டிற்கு 14 ஆண்டுகள் கழித்து தீர்ப்பு வெளியாகி உள்ளது. இவ்வாறு காலதாமதமாக நீதி கிடைப்பது தவிர்க்கப்பட வேண்டும்.

தொடர்புடைய கட்டுரைகள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -Central Learning campus

சமீபத்திய கட்டுரைகள்