1986 ஆம் ஆண்டு இயற்றப்பட்ட நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம் நீக்கப்பட்டு அதற்கு மாற்றாக நுகர்வோர் பாதுகாப்பை வலுப்படுத்தும் வகையில் கடந்த 2019 ஆம் ஆண்டில் நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் இந்திய பாராளுமன்றத்தில் இயற்றப்பட்டு கடந்த 2020 ஜூலை மாதம் முதல் அமலில் உள்ளது.
இந்தச் சட்டம் நுகர்வோர்களின் உரிமைகளையும் நலனையும் பாதுகாக்க ஆலோசனை அமைப்புகளாக (advisory body) நுகர்வோர் பாதுகாப்பு கவுன்சில்கள், நெறிப்படுத்தும் அமைப்பாக மத்திய நுகர்வோர் பாதுகாப்பு அதிகார அமைப்பு ஆணையம் (regulatory body), நுகர்வோர் புகார்களை விசாரித்து தகுந்த தீர்ப்புகளை வழங்கும் அமைப்புகளாக நுகர்வோர் நீதிமன்றம் என்று மக்களால் அழைக்கப்படும் நுகர்வோர் குறைதீர் ஆணையங்கள் (adjudicatory body) ஆகிய மூன்று வகையான அமைப்புகளை உருவாக்கியுள்ளது.
நுகர்வோர் பாதுகாப்புச் சட்டப்படி தேசிய அளவில் மத்திய நுகர்வோர் பாதுகாப்பு கவுன்சில், மாநில அளவில் மாநில நுகர்வோர் பாதுகாப்பு கவுன்சில் மற்றும் மாவட்ட அளவில் மாவட்ட நுகர்வோர் பாதுகாப்பு கவுன்சில் மூன்று வகையான நுகர்வோர் பாதுகாப்புக்கான ஆலோசனை அமைப்புகள் அமைக்கப்பட்டு செயல்பட வேண்டும். நுகர்வோர் உரிமைகளை பாதுகாக்கவும் மேம்படுத்துவதும் தேவையான ஆலோசனைகளை வழங்குவதும்இந்த அமைப்புகளின் நோக்கமாகும்.
மாநில கவுன்சில்
தமிழ்நாடு மாநில மற்றும் மாவட்ட நுகர்வோர் பாதுகாப்பு விதிகள் 2023 -ன்படி, மாநில நுகர்வோர் பாதுகாப்பு கவுன்சிலுக்கு தலைவராக நுகர்வோர் பாதுகாப்பு விவகாரங்களை கவனிக்கும் தமிழக அரசின் அமைச்சர் செயல்படுவார். தமிழக அரசால் நியமனம் செய்யப்படும் இரண்டு பாராளுமன்ற உறுப்பினர்களும் இரண்டு சட்டமன்ற உறுப்பினர்களும் இந்த குழுவில் உறுப்பினர்களாக செயல்படுவார்கள். உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புக்கான ஆணையர், மாநில நுகர்வோர் குறைதீர் ஆணையத்தின் பதிவாளர் ஆகியோர் மாநில நுகர்வோர் பாதுகாப்பு கவுன்சிலின் பதவி வழி (ex officio) உறுப்பினர்களாக இருப்பார்கள்.
ஐந்துக்கும் மேற்படாத அரசு மற்றும் அரசு சார் நிறுவனங்களின் பிரதிநிதிகளைம் ஐந்துக்கும் மேற்படாத நுகர்வோர் அமைப்புகளின் (Consumer Organizations) பிரதிநிதிகளைம் மாநில நுகர்வோர் பாதுகாப்பு கவுன்சிலுக்கு தமிழக அரசு நியமிக்க வேண்டும். நுகர்வோர் நலனுக்கான செயல்பாட்டாளர்கள், ஆய்வு மற்றும் பயிற்சி நிறுவன வல்லுநர்கள், கல்வியாளர்கள், விவசாயிகள், வர்த்தகம் அல்லது தொழில் துறையினர் போன்ற பிரிவுகளில் இருந்து ஐந்துக்கும் மேற்படாத உறுப்பினர்களை மாநில நுகர்வோர் பாதுகாப்பு கவுன்சிலுக்கு மாநில அரசு நியமிக்க வேண்டும். இதில் ஒருவர் மகளிராக இருக்க வேண்டும். தமிழக அரசின் கூட்டுறவு உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறையின் செயலாளர் மாநில நுகர்வோர் பாதுகாப்பு உறுப்பினர்-செயலாளராக (Member-Secretary) செயலாளராக இருப்பார்.
நியமனம்
தமிழ்நாடு மாநில நுகர்வோர் கவுன்சிலை மறுசீரமைத்து கடந்த 30 மே 2025 அன்று தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த கவுன்சிலுக்கு மாநில உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை அமைச்சர் தலைவராக இருப்பார். மாநில நுகர்வோர் கவுன்சிலின் உறுப்பினர் செயலாளராக கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறையின் முதன்மை செயலாளர் இருப்பார். இதன் 21 உறுப்பினர்கள் விவரம் பின்வருமாறு.
(தொடர்ச்சி கீழே உள்ள அட்டவணை செய்திகளுக்கு கீழ்)
01 திரு டி. எம். கதிர் ஆனந்த், வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் |
02 திரு எஸ். முரசொலி, தஞ்சாவூர் நாடாளுமன்ற உறுப்பினர் |
03 திரு எஸ். ஆர். ராஜா, தாம்பரம் சட்டமன்ற உறுப்பினர் |
04 திரு அன்னியூர் சிவா, விக்கிரவாண்டி சட்டமன்ற உறுப்பினர் |
05 ஆணையர், உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை |
06 பதிவாளர், மாநில நுகர்வோர் குறைதீர் ஆணையம் |
07 தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர், (தமிழ்நாடு மின் விநியோக அமைப்பின் தலைவர்) TANGEDCO |
08 மாநில ஒருங்கிணைப்பாளர், இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் |
09 உதவி பொது மேலாளர், மாநில அளவிலான வங்கியாளர்கள் குழு |
10 துணை இயக்குனர், இந்திய தரநிலை பணியகம் (பி ஐ எஸ்) |
11 ஆணையர், தமிழ்நாடு உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகம் துறை |
12 தலைவர், ஈரோடு கன்ஸ்யூமர் புரோடக்சன் சென்டர் |
13 தலைவர், கன்ஸ்யூமர் புரோடக்சன் மற்றும் சிவில் ரைட்ஸ் அசோசியேசன், குலசேகரம், கன்னியாகுமரி |
14 தலைவர், கன்ஸ்யூமர் எவர்னஸ் ஃபெடரேசன் ஆப் இந்தியா அம்பத்தூர், சென்னை |
15 தலைவர், கன்ஸ்யூமர் ரிசர்ச், எஜுகேஷன், ஆக்சன், ட்ரெயினிங் டிரஸ்ட், பரமக்குடி |
16 தலைவர், நுகர்வோர் பாதிப்புகள் நலச்சங்கம், திண்டிவனம் |
17 திரு வி. சத்தியநாராயணன், காவேரி டெல்டா விவசாயிகள் குழு, திருவாரூர் |
18 தலைவர், மெட்ராஸ் சேம்பர் ஆப் காமர்ஸ் அண்ட் இண்டஸ்ட்ரி, சென்னை |
19 தலைவர், தமிழ்நாடு ஹோட்டல்கள் சங்கம், சென்னை |
20 தலைவர், சிட்டிசன் கன்ஸ்யூமர் அண்ட் சிவிக் ஆக்சன் குரூப் டிரஸ்ட் ஆழ்வார்பேட்டை சென்னை |
21 முதல்வர், எத்திராஜ் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, சென்னை |
https://www.stationeryprinting.tn.gov.in/extraordinary/2025/245_Ex_II_2_2025.pdf
மாவட்ட கவுன்சில்
தமிழ்நாடு மாநில மற்றும் மாவட்ட நுகர்வோர் பாதுகாப்பு விதிகள் 2023 -ன்படி, மாவட்ட நுகர்வோர் பாதுகாப்பு கவுன்சிலின் தலைவராக மாவட்ட ஆட்சித் தலைவர் செயல்படுவார். ஒரு பாராளுமன்ற உறுப்பினரும் இரண்டு சட்டமன்ற உறுப்பினர்களும் இந்த குழுவில் இருப்பார்கள். நுகர்வோர் நலன் தொடர்புடைய அரசு துறைகள் மற்றும் நிறுவனங்களின் இரண்டு பிரதிநிதிகளும் தன்னார்வ நுகர்வோர் அமைப்புகளின் மூன்று பிரதிநிதிகளும் மாவட்ட நுகர்வோர் பாதுகாப்பு கவுன்சிலில் இடம் பெற வேண்டும்.
விவசாயிகள், உற்பத்தியாளர்கள், வர்த்தகர்கள் மற்றும் தொழில் முனைவோர் பிரிவிலிருந்து இரண்டு பிரதிநிதிகளையும், அங்கீகரிக்கப்பட்ட தொழிற்சங்க பிரிவிலிருந்து இரண்டு பிரதிநிதிகளையும் நுகர்வோர் நலன் தொடர்பான திறமை வாய்ந்த மூன்று பிரதிகளையும் கிராம ஊராட்சி, ஊராட்சி ஒன்றிய குழு மற்றும் மாவட்ட ஊராட்சி ஆகியவற்றிருந்து தலா இரண்டு உறுப்பினர்களையும் மாவட்ட நுகர்வோர் பாதுகாப்பு கவுன்சிலுக்கு அதன் தலைவரான மாவட்ட ஆட்சித் தலைவர் நியமிக்க வேண்டும்.
நுகர்வோர் நீதிமன்றம் என்று அழைக்கப்படும் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தின் தலைவர் அல்லது அவரால் பரிந்துரைக்கப்படும் ஆணைய உறுப்பினர்களில் ஒருவர்மாவட்ட நுகர்வோர் பாதுகாப்பு கவுன்சிலில் பதவி வழி (ex officio) உறுப்பினராகவும் இருப்பார். இந்த கவுன்சிலுக்கு உறுப்பினர்-செயலாளராக (Member-Secretary) மாவட்ட உணவு வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் செயல்படுவார்.
மாவட்ட கவுன்சில் அமைக்கப்படுமா?
ஒவ்வொரு மாவட்டத்திலும் நுகர்வோர் பாதுகாப்புக்காக மாவட்ட நுகர்வோர் கவுன்சில்கள் செயல்படுவது அவசியமானதாகும். இதில் யார்? யார்? இடம் பெற வேண்டும் என்ற விவரங்கள் அடங்கிய தமிழக அரசாணை வெளியிடப்பட்டு பல மாதங்கள் கடந்து விட்டது. தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு மாவட்டத்திலும் நுகர்வோர் கவுன்சில் உடனடியாக அமைக்கப்பட வேண்டும் என்பது நுகர்வோர் ஆர்வலர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
நுகர்வோர் பூங்கா (The Consumer Park) கருத்து: அனைத்து மாவட்டங்களிலும் உடனடியாக மாவட்ட நுகர்வோர் கவுன்சில்களை அமைக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் விருப்பமாகும்.