spot_img
July 27, 2024, 12:49 pm
spot_img

சென்னை: அகண்ட பரிபூரண சத்குரு சச்சிதானந்த சபையின் 77 ஆம் குருபூஜை

ஒன்றே கடவுள், உணர்வே பிரம்மம், அறிவே சற்குரு, சற்குருவே கடவுள், பகுத்தறிவுள்ளவர் தத்துவஞானி ஆவார் என்பவை உள்ளிட்ட கோட்பாடுகளையும் ஜீவகாருண்யத்தையும் வலியுறுத்திய சத்குரு சச்சிதானந்தத்தின் 77 ஆம் ஆண்டு குருபூஜை சமீபத்தில்  சென்னை -தாம்பரத்திலிருந்து ஆறு கிலோமீட்டர் தொலைவில்   கேம் ரோடு என்ற இடத்தில் உள்ள அகண்ட பரிபூரண சச்சிதானந்த சபையின் தலைமையகத்தில் நடைபெற்றது.

1936-ம் ஆண்டு திண்டுக்கல் மாவட்டம், பழனிக்கு அருகிலுள்ள கணக்கன்பட்டி என்ற ஊரிலுள்ள காளியம்மன் கோவிலுக்கு திடீரென வந்த சுவாமிகளின் முகவசீகரம் கணக்கன்பட்டி மக்களை கவர்ந்தது. அவர் எங்கு பிறந்தார்? எங்கிருந்து வந்தார்? என்பது போன்ற அவரைப் பற்றிய விவரங்கள் எதுவும் அவர்களுக்கு  தெரியவில்லை.

அவரை இறைவனின் அவதாரமாகக் கருதிய அந்த ஊர்மக்களின் அன்பு, இரண்டு ஆண்டுகளுக்கு அவரை அங்கேயே தங்கவைத்தது. திருமூலர் கூறிய சிவசித்தரின் இயல்புகளை முழுவதுமாகப் பெற்றிருந்த சுவாமிகள், தம்மை நாடி வந்தவர்களுக்கு உபதேசங்கள் செய்ததுடன் அதிசயங்களையும் நிகழ்த்தி காட்டியதாக கணக்கன்பட்டி மக்கள் தெரிவிக்கின்றனர்.

காசி, அயோத்தி என்று பல இடங்களுக்குச் சென்றுவிட்டு நாசிக்கில் உள்ள பஞ்சவடியில் ஒரு மலைக்குகையில் சிறிது காலம் தவமியற்றியதாக சாதுக்கள் தெரிவிக்கின்றனர். மீண்டும் தமிழகத்துக்கு ’ வந்து, கணக்கன்பட்டியில் தங்கியிருந்த போது அவரது மெய்யன்பர்கள் அவரது அனுமதியுடன் 1938-ம் ஆண்டு அகண்ட பரிபூரண சச்சிதானந்த சபையை கணக்கன்பட்டியில் நிறுவினர்.

1945-ம் ஆண்டு சென்னை மாகாண ஆளுநரின் முகாம் அலுவலரான தனகோபால் அவர்களுடன், சென்னை மவுண்ட்ரோடில் உள்ள அரசினர் மாளிகையில் தங்கியிருந்தார். ஆளுநர் பொறுப்பில் இருந்த ஆர்ச்சிபால்ட் எட்வர்ட் நை, சுவாமிகளின் மகிமையை உணர்ந்து அவரிடம் மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்தார்.  1946-ம் ஆண்டு நவம்பர் மாதம், 19-ம் நாள் மாலை ஐந்தரை மணிக்கு குருபரன் விதேக முக்தி அடைந்தார்கள். அவரை அடக்கம் செய்த இடத்தில் குருகுலம் அமைக்கப்பட்டு  ஒவ்வொரு வியாழக்கிழமையும் வார குரு பூஜை நடத்தப்பட்டு அன்னதானம் வழங்கப்படுகிறது.  ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை மாதம் வியாழக்கிழமை ஒன்றில் ஆண்டு குரு பூஜை நடத்தப்படுகிறது.

பழனி அருகே உள்ள கணக்கன்பட்டியில் தோன்றிய அகண்ட பரிபூரண சச்சிதானந்த சபைக்கு தலைமையகம் சென்னையில் இருந்த போதிலும் தமிழகத்தில் பல பகுதிகளில் கிளை சபைகள் இயங்கி வருகின்றன. ஒவ்வொரு சபையிலும் சச்சிதானந்தம் என்று அழைக்கப்படும் குருநாதனின் கொள்கைகளை பின்பற்றி திருமணம் செய்து கொள்ளாமல் சாதுக்கள் பணியாற்றி வருகிறார்கள்.  ஒவ்வொரு சபைக்கும் நிர்வாக குழுவும் அன்பர்களும் உள்ளார்கள்.

சமீபத்தில் இச்சபையின் தலைமையகத்துக்கு நிர்வாகக் குழு தலைவராக ஒளிப்பதிவாளர் கணக்கன்பட்டி கே. திருஞானம் பொறுப்பேற்றுள்ளார்.  இவரது குடும்பத்தினர் தொன்று தொட்டு சச்சிதானந்தத்தின் அன்பர்களாக  இருந்து வருவதோடு பல ஆண்டுகளுக்கு முன்பே சொந்த நிலத்தை சபைக்கு தானம் கொடுத்துள்ளார்கள். இச்சபையின் செயலாளராக ஓய்வு பெற்ற ராணுவ   கர்னல் மலையப்பன் அவர்களின் மனைவி   வசந்தா அவர்களும் பொருளாளராக ஓபிகேடி மனோகரன் அவர்களும் பொறுப்பு வைக்கிறார்கள்.

மக்களின் நம்பிக்கை எங்கு உள்ளதோ அந்த இடத்தை தேடி ஆன்மீகப் பயணத்தை மக்கள் மேற்கொள்கிறார்கள். அந்த வகையில்  சச்சிதானந்த  குருகுலம் பலரின் நம்பிக்கையை பெற்றுள்ளது என்றால் மிகையல்ல.

கே. திருஞானம்
கே. திருஞானம்
கே. திருஞானம், தலைவர், ஸ்ரீ அகண்ட பரிபூரண சச்சிதானந்த சபை சென்னை

தொடர்புடைய கட்டுரைகள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -Central Learning campus

சமீபத்திய கட்டுரைகள்