நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் 2019 -ன்படி நுகர்வோர் பாதுகாப்பு பொது விதிகள், 2020 என்ற விதிகளை அரசு இதழில் (கெஜட்டில்) இந்திய அரசு வெளியிட்டுள்ளது. இந்த விதிகள் 20 ஜூலை 2020 முதல் அமலுக்கு வந்துள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரு பொருளை விற்பனை செய்யும் போதும் அல்லது ஏதேனும் சேவையை (சர்வீஸ்) வழங்கும் போதும் பணம் செலுத்தும் நுகர்வோருக்கு பொருளை விற்பனை செய்பவர் அல்லது சேவையை வழங்குபவர் வழங்கும் ரசீதில் என்னென்ன விவரங்கள் இருக்க வேண்டும் என்று அந்த விதியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
(1) விற்பனையாளரின் பெயர் மற்றும் முகவரி
(2) பதினாறு எழுத்துகளுக்கு மிகாமல் தொடர்ச்சியான வரிசை எண்
(3) தேதி
(4) நுகர்வோரின் பெயர்
(5) விற்பனை செய்யப்படும் பொருட்கள் அல்லது சேவை
(6) பொருட்களின் அளவு
(7) ஷிப்பிங் முகவரி (ஏதேனும் இருப்பின்)
(8) வரி விதிக்கக்கூடிய மதிப்பு மற்றும் தள்ளுபடிகள்
(9) வரி விகிதம்
(10) விற்பனையாளர் அல்லது பிரதிநிதியின் கையொப்பம்
(11) வாடிக்கையாளர் பராமரிப்பு எண் அல்லது மின்னஞ்சல் ஐடி (ஏதேனும் இருப்பின்)
(12) மொத்த விலை (அதில் பொருளின் விலை, வரி போன்ற விளக்கங்களுடன் – break up details)
அரசு இதழில் வெளியாகி உள்ள இந்த விதி அமல்படுத்தப்படுகிறதா? விதிகளின்படி ரசீதுகள் நுகர்வோருக்கு வழங்கப்படுகிறதா? என்பது ஆய்வுக்குரியதாகும். இன்னும் சொல்லப்போனால் பல கடைகளில் வாங்கும் பொருட்களுக்கு ரசீது வழங்கும் பழக்கம் இல்லாமல் உள்ளது. விமானங்களில் கூட பயணிக்கும் போது வாங்கும் உணவுப் பொருட்களுக்கு ரசீது வழங்கப்படுவதில்லை. ரயில் நிலையங்களிலும் ரயிலில் பயணிக்கும் போதும் வாங்கும் பொருட்களுக்கு ரசீது வழங்கப்படுவதில்லை. இவ்வாறு பொருட்கள் வாங்கும் போது குறைந்தபட்ச விலையை விட கூடுதலாக வசூலிப்பது மற்றும் பொருட்களில் குறைபாடு போன்றவை குறித்து புகார் செய்ய ரசீது அவசியமான ஒன்றாக உள்ளது. விற்கப்படும் பொருட்களுக்கும் வழங்கப்படும் சேவைகளுக்கும் குறைந்தபட்சம் ரசீது வழங்குவது நாடு முழுவதும் கட்டாயமாக்கப்பட வேண்டும் என்பதே நுகர்வோர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது