spot_img
May 15, 2024, 4:51 am
spot_img

குறைபாடு உடைய மின் தூக்கி (லிப்ட்)  வழங்கிய நிறுவனம் 29 லட்சம் வழங்க நாமக்கல் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவு

கோயம்புத்தூர் காளப்பட்டியில் உள்ள கோவை எஸ்டேட்டில் வசித்து வருபவர் ராமசாமி கவுண்டர் மகன் ஆர் செல்லப்பன் (70).   இவர் கடந்த 2018 ஆம் ஆண்டு ஒரு வீட்டைக் கட்டி மாடியில்  வசித்து வந்துள்ளார். இவரது மனைவி  உடல்நல குறைவின் காரணமாக சக்கர நாற்காலியில் மட்டுமே  நடமாட முடியும்.  இந்நிலையில் மாடியில் இருந்து படிக்கட்டில் நடந்து வருவது இயலாது என்பதால் தமது வீட்டிற்கு   லிப்ட் ஒன்றை வாங்கி   பொருத்துவதற்காக சென்னையில் உள்ள ராமநாதன் அண்ட் கோ என்ற தனியார் நிறுவனத்திடம் லிப்ட் வாங்குவதற்கான ஒப்பந்தத்தை செய்துள்ளார்.  

ஒப்பந்தப்படி ரூபாய் 19 லட்சத்தை செல்லப்பன் லிப்ட் வழங்குவதாக ஒப்புக்கொண்ட நிறுவனத்துக்கு கடந்த 2018 ஆம் ஆண்டு  ஜூன் மாதத்தில் செலுத்தியுள்ளார். ஒப்பந்தப்படி இத்தாலியில் உள்ள நிறுவனத்தில் உற்பத்தி செய்யப்படும் லிப்டை எலைட் எலிவேட்டர் என்ற நிறுவனம் மூலமாக இறக்குமதி செய்து பணத்தைப் பெற்ற நிறுவனம் செல்லப்பனுக்கு லிப்டை நான்கு மாத காலத்துக்குள் வழங்கி பொருத்தி தருவதாக தர வேண்டும்.

ரூபாய் 19 லட்சத்தை பெற்றுக் கொண்ட லிப்ட் விற்பனையாளர் ஒப்புக்கொண்ட நான்கு மாத காலத்துக்குள் அதனை வழங்காமல் 8 மாதம் கழித்து லிப்ட்டை வீட்டில் பொருத்திக் கொடுத்துள்ளார்.  காலதாமதமாக பொருத்தப்பட்ட லிப்ட்டும் ஒருமுறை செல்லப்பனின் மனைவி சக்கர நாற்காலியில் லிப்டில் வரும்போது இடையில் நின்று விட்டது. லிப்டின் இறக்குமதியாளர் மற்றும் விற்பனையாளர் ஆகியோருக்கு இது குறித்து பலமுறை புகார் தெரிவித்தும் சரியான நடவடிக்கையை மேற்கொள்ளாததால் கடந்த 2022 அக்டோபர் மாதத்தில் கோயம்புத்தூர் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில் லிப்டின் இறக்குமதியாளர், விற்பனையாளர் மற்றும் நிர்வாகிகள் மீது வழக்கு தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கானது விரைவான விசாரணைக்கு கடந்த பிப்ரவரி மாதத்தில் நாமக்கல் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி டாக்டர் வீ. ராமராஜ் தலைமையிலான அமர்வு   (10-04-2024) வழங்கிய தீர்ப்பில் குறைபாடுள்ள லிப்ட்டை இறக்குமதியாளர் மற்றும் விற்பனையாளர்கள் விற்றதோடு சரியான சேவையையும் செய்து தரவில்லை என்று தெரிவித்துள்ளனர்.

ரூபாய் 19 லட்சத்தை செலுத்தியவருக்கு ஒப்புக்கொண்ட நான்கு மாதத்தில் விற்பனையாளர் லிப்டை வழங்கவில்லை. காலதாமதமாக வழங்கிய லிப்டிலும் பணம் செலுத்தியவர் கேட்டுக் கொண்ட வகையில் அல்லாத கதவுடன் லிப்ட் வழங்கப்பட்டுள்ளது. வழங்கப்பட்ட லிப்டிலும் இயந்திர மற்றும் எலக்ட்ரானிக்ஸ் குறைபாடுகள் இருந்துள்ளது. இவற்றை  வழக்கை தாக்கல் செய்தவர் சாட்சியம் மற்றும் ஆவணங்கள் மூலம் நிரூபித்துள்ளார் என்று தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

குறைபாடு உள்ள லிப்ட்டை வழங்கியதால் அதனை நான்கு வாரத்துக்குள் எடுத்துக்கொண்டு அதற்கு செலுத்தப்பட்ட ரூபாய் 19 லட்சம் மற்றும்  பணம் செலுத்தப்பட்ட நாளிலிருந்து ஆண்டொன்றுக்கு 9 %  வட்டி சேர்த்து வழக்கு தாக்கல் செய்தவருக்கு லிப்ட் விற்பனையாளரும் இறக்குமதியாளரும் நான்கு வார காலத்திற்குள் வழங்க வேண்டும் என்று நாமக்கல் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேலும், உற்பத்தி குறைபாடான பொருளை விற்றது மற்றும் சேவை குறைபாடு புரிந்தது ஆகியவற்றிற்காக வழக்கு தாக்கல் செய்தவருக்கு ஏற்பட்ட மன உளைச்சல் மற்றும் சிரமங்களுக்கு லிப்ட் விற்பனையாளரும் இறக்குமதியாளரும் நான்கு வார காலத்திற்குள் ரூபாய் 10 லட்சம் இழப்பீட்டை வழக்கு தாக்கல் செய்யவருக்கு வழங்க வேண்டும் என்றும் தவறினால் நான்கு வாரம் முடிவடைந்த நாளில் இருந்து பணம் செலுத்தப்படும் நாள் வரை ஆண்டொன்றுக்கு 9 %  வட்டி சேர்த்து வழங்க வேண்டும் என்றும் இந்த தீர்ப்பில்   கூறப்பட்டுள்ளது.

சாஜ். ம
சாஜ். ம
சாஜ். ம, வழக்கறிஞர்/ சட்டக் கல்லூரி விரிவுரையாளர்

தொடர்புடைய கட்டுரைகள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -Central Learning campus

சமீபத்திய கட்டுரைகள்