spot_img
September 17, 2024, 1:34 am
spot_img

மருத்துவ இன்சூரன்ஸ் நிறுவனம் நுகர்வோருக்கு ரூ 6 லட்சம் வழங்க நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவு

நாமக்கல், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு அருகே உள்ள அய்யம்பாளையத்தில் வசித்து வருபவர் காளியப்பன் மகன் கே. கண்ணன். இவர் கடந்த மார்ச், 2015 ஆம் ஆண்டு தமக்கும் தமது மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளுக்கும் ரூ 14,390/- பிரிமியம் செலுத்தி ஸ்டார் ஹெல்த் இன்சூரன்ஸ் நிறுவனத்தில் மருத்துவ காப்பீட்டு பாலிசியை பெற்றுள்ளார் இதற்குப் பின்னர் ஒவ்வொரு ஆண்டும் பிரீமியம் செலுத்தி பாலிசியை புதுப்பித்து வந்துள்ளார்.

மருத்துவ காப்பீடு பெற்றிருந்த கண்ணனுக்கு கடந்த 2022 ஏப்ரலில் வாகன விபத்து ஏற்பட்டு எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. கோயம்புத்தூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட பின்னர் மருத்துவமனை நிர்வாகம் சிகிச்சைக்கான பணத்தை செலுத்துவதற்கு முன் அனுமதியை இன்சூரன்ஸ் நிறுவனத்திடம் கேட்டுள்ளது. ஆனால், முன்பு காப்பீடு பெற்றவருக்கு இருந்த நோய் குறித்த விவரங்களை தெரிவிக்காமல் காப்பீடு பெற்றுள்ளதால் மருத்துவ   சிகிச்சைக்கான பணத்தை வழங்க இயலாது என இன்சூரன்ஸ் நிறுவனம் கூறிவிட்டது. இதனால் மருத்துவமனைக்கு இன்சூரன்ஸ் பாலிசி பெற்று இருந்தும் சொந்த பணத்தை செலுத்தி விபத்துக்குள்ளானவர் சிகிச்சை பெற்றுள்ளார்.

மருத்துவ சிகிச்சைக்கான பணத்தையும் தமக்கேற்பட்ட சிரமத்திற்காக இழப்பீட்டையும் வழங்க கேட்டு இன்சூரன்ஸ் நிறுவனத்தின் மீது கடந்த 2022 ஆம் ஆண்டு நாமக்கல் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில் கண்ணன் வழக்கு தாக்கல் செய்திருந்தார்.  2014 ஆம் ஆண்டுக்கு முன்பு நடந்த    விபத்தில் வழக்கு தாக்கல் செய்து உள்ளவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டு உலோக பாகங்கள் உடலில் பொருத்தப்பட்டிருந்தது என்றும்   அதனை நீக்குவதற்காக 2014 ஆம் ஆண்டு மீண்டும் அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது என்றும் இந்த விவரங்களை தெரிவிக்காமல்  காப்பீடு கேட்கும் படிவத்தில் முந்தைய நோய்கள் குறித்த விவரத்தை காப்பீடு பெற்றவர் மறைத்து விட்டார் என்றும் தவறான தகவலை வழங்கி காப்பீடு பெற்றதால் இழப்பீடு வழங்க இயலாது என்றும் இன்சூரன்ஸ் நிறுவனம் நீதிமன்றத்தில் வாதிட்டது.

விசாரணை முடிவடைந்து கடந்த ஜூன் 4 அன்று நீதிபதி டாக்டர் வீ. ராமராஜ் தலைமையிலான அமர்வு தீர்ப்பளித்தது. முன்பு நோய் வாய்பட்டிருந்தவர்  இன்சூரன்ஸ் பாலிசியை பெற்றால் 48 மாத காலத்திற்குள் ஏற்படும் மருத்துவ சிகிச்சைகளுக்கு இன்சூரன்ஸ் பெற முடியாது. அதன் பின்னரே மருத்துவ சிகிச்சைகக்கான பணத்தை இன்சூரன்ஸ் அலுவலகத்தில் கேட்டு பெற முடியும் என விதி உள்ளது. வழக்கு தாக்கல் செய்துள்ளவர் பாலிசியை பெற்று ஆறு ஆண்டுகள் கழித்து மருத்துவ சிகிச்சைக்கான பணத்தை கேட்டுள்ளார். இதனை வழங்க வேண்டியது இன்சூரன்ஸ் நிறுவனத்தின் கடமையாகும். முன்பு ஏற்பட்டிருந்த நோயின் தொடர்ச்சியாக தற்போது இன்சூரன்ஸ் பெற்றவருக்கு சிகிச்சை பெற வேண்டிய நிலை ஏற்படவில்லை மாறாக திடீரென ஏற்பட்ட விபத்தால் அவருக்கு சிகிச்சை வழங்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இத்தகைய காரணங்களால்   இன்சூரன்ஸ் செய்திருந்தவருக்கு மருத்துவ சிகிச்சைக்கான பணத்தை இன்சூரன்ஸ் நிறுவனம் வழங்க மறுத்தது சேவை குறைபாடு என்று தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

வழக்கு தாக்கல் செய்த நுகர்வோர் மருத்துவ சிகிச்சைக்காக செலவிட்ட பணம் ரூ 4,74,200/-   ஐ   நுகர்வோர் மருத்துவமனையில் பணத்தை செலுத்திய நாளில் இருந்து ஆண்டொன்றுக்கு 9 சதவீத வட்டியுடன் வழங்கவும்   நுகர்வோருக்கு ஏற்பட்ட மன உளைச்சல் மற்றும் சிரமங்களுக்கு ரூ 1,25,000/-   வழங்கவும் வழக்கின் செலவு தொகையாக ரூ 10,000/- வழங்கவும் இன்சூரன்ஸ் நிறுவனத்துக்கு நாமக்கல் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதிலிருந்து பொதுமக்கள் தெரிந்து கொள்ள வேண்டியது என்னவெனில் எந்த ஒரு இன்சூரன்ஸ் பாலிசியையும்  பெறுவதற்காக தாங்கள் கையொப்பம் செய்யும் போது படிவங்களை படித்து பார்த்து கையொப்பம் செய்ய வேண்டும் என்பதாகும்.

சாஜ். ம
சாஜ். ம
சாஜ். ம, வழக்கறிஞர்/ சட்டக் கல்லூரி விரிவுரையாளர்

தொடர்புடைய கட்டுரைகள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -Central Learning campus

சமீபத்திய கட்டுரைகள்