
ஒவ்வொருவருக்கும் வாழ்க்கையில் நுகர்வோர் பிரச்சனைகள் ஏற்படுகின்றன. மற்ற நீதிமன்றங்களை காட்டிலும் நுகர்வோர் நீதிமன்றங்களை அணுகுவது எளிதானது (simple). நுகர்வோர் நீதிமன்றங்களில் 5 லட்சம் வரை நீதிமன்ற கட்டணம் கிடையாது. அதற்கு மேலும் பெயரளவிலேயே கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது (inexpensive). விரைவில் தீர்வு காணும் வகையில் சுருக்க முறையிலேயே இங்கு விசாரணை (speedy) நடைபெறுகிறது. நுகர்வோர் நீதிமன்றங்களை அணுகி தீர்வு காண்பது எப்படி? என்று அறிய தங்களது பொன்னான ஐந்து நிமிடத்தை ஒதுக்கி இந்த கட்டுரையை படிக்குமாறும் தங்களது நண்பர்கள் அனைவருக்கும் அனுப்புமாறும் நுகர்வோர் பூங்கா தங்களை அன்புடன் வேண்டுகிறது. இந்தக் கட்டுரை தங்களுக்கோ அல்லது மற்றவர்களுக்கோ கட்டாயம் பயன்படக்கூடியதாக இருக்கும்.
1986-க்கு முன்பு
ஒரு விற்பனையாளர் பாலில் கலப்படம் செய்து விற்பனை செய்தால் அவர் மீது கலப்பட தடுப்புச் சட்டப்படி (food adulteration) நடவடிக்கை மேற்கொண்டு தகுந்த தண்டனையை அவருக்கு வழங்க இயலும். ஆனால், கலப்பட பாலை பணம் கொடுத்து பெற்ற நுகர்வோர் நிவாரணம் (remedy) பெற எவ்வித சட்டமும் இந்தியாவில் கடந்த 1986 ஆம் ஆண்டு வரை இல்லை. இந்நிலையில் இந்தியாவில் எவ்வாறு நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் இயற்றப்பட்டது? நுகர்வோர் என்பவர் யார்? நுகர்வோர் பிரச்சினைகள் எவை? எத்தகைய தீர்வுகளை பெறலாம்? எவ்வாறு நுகர்வோர் நீதிமன்றங்கள் அமைக்கப்பட்டுள்ளன? கடந்த மாதம் பிறப்பிக்கப்பட்ட உச்ச நீதிமன்ற தீர்ப்பால் என்ன மாற்றங்கள் ஏற்படப் போகிறது என்பதை பார்ப்போம்.
சட்டம் உருவானது எப்படி?
01. கடந்த 1985-ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் பொதுச் சபையால் நுகர்வோர் பாதுகாப்பு வழிகாட்டு நடைமுறைகள் (United Nations Guideline on Consumer Protection, 1985) இயற்றப்பட்டது. இதில் கையொப்பம் செய்த நாடுகள் தங்கள் நாடுகளில் நுகர்வோர் பாதுகாப்புக்கு பிரத்தியோகமான சட்டங்கள் இயற்றி நுகர்வோர் குறைதீர் அமைப்புகளை உருவாக்க வேண்டுமென்று இந்த வழிகாட்டுதல்கள் தெரிவித்தன.
இதில் நமது பாரத தேசம் கையொப்பம் செய்த நிலையில் கடந்த 1986 ஆம் ஆண்டு நுகர்வோர் பாதுகாப்பிற்காக சிறப்பு சட்டம் (Consumer Protection Act) இந்திய பாராளுமன்றத்தில் இயற்றப்பட்டு தேசிய நுகர்வோர் குறைதீர் ஆணையமும் ஒவ்வொரு மாநிலத்திலும் மாநில நுகர்வோர் குறைதீர் ஆணையங்களும் ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையங்களும் அமைக்கப்பட்டன. இவை பொதுமக்களால் நுகர்வோர் நீதிமன்றங்கள் (consumer courts) என அழைக்கப்படுகின்றன.
கடந்த 2015 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபை நுகர்வோர் பாதுகாப்பு வழிகாட்டுதல் நடைமுறைகளில் (United Nations Revised Guideline on Consumer Protection, 2015) புதிய அம்சங்களை இணைத்து மாற்றி அமைத்ததன் காரணமாகவும் நுகர்வோர் பாதுகாப்பை வலுப்படுத்தும் விதமாக பல அம்சங்களை உள்ளடக்கி கடந்த 2019ஆம் ஆண்டு புதிய நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் இந்திய பாராளுமன்றத்தில் இயற்றப்பட்டு அமலில் இருந்து வருகிறது.
நுகர்வோர் என்பவர் யார்?
02. Who is consumer? ஒரு பொருளை அல்லது சேவையை பணம் செலுத்தி பெறுபவர் மற்றும் அவ்வாறு பெற்றவரின் அனுமதியுடன் அதனை பயன்படுத்துபவர் நுகர்வோர் ஆவார். சுய தொழில் புரிவதற்காக அல்லாமல் வணிக பயன்பாட்டிற்காக பொருளை அல்லது சேவையை பெறுபவர் நுகர்வோர் அல்ல (பிரிவு 2-7).
நுகர்வோர் உரிமைகள் எவை?
உயிருக்கும் உடமைக்கும் ஆபத்து விளைவிக்கும் பொருள் அல்லது சேவைக்கு எதிரான பாதுகாப்பு உரிமை
விற்கப்படும் சொத்து அல்லது சேவையின் குறித்த விவரங்களை அறிந்து கொள்ளும் உரிமை
பல்வேறு வகையான பொருட்கள், தயாரிப்புகள் அல்லது சேவைகளை போட்டி விலையில் அணுகுவதற்கான உறுதி செய்யம் உரிமை
நுகர்வோரின் நலன்கள் பொருத்தமான மன்றங்களில் உரிய பரிசீலனையைப் பெறும் என்று கேட்கப்படுவதற்கும் உறுதியளிக்கப்படுவதற்கும் உரிமை
நியாயமற்ற வர்த்தக நடைமுறைகள் அல்லது கட்டுப்படுத்தப்பட்ட வர்த்தக நடைமுறைகள் அல்லது நுகர்வோரின் நேர்மையற்ற சுரண்டலுக்கு எதிராக பரிகாரம் தேடும் உரிமை
நுகர்வோர் விழிப்புணர்வுக்கான உரிமை
(What are Consumer Rights? பிரிவு 2-9, நுகர்வோர் பாதுகாப்பு சட்டம்)
நுகர்வோர் கவுன்சில்கள்
03. நுகர்வோர் தகராறு தொடர்பான வழக்குகளை தீர்க்க தேசிய, மாநில மற்றும் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையங்கள் செயல்படுகின்றன. இதைப்போலவே, மத்திய, மாநில மற்றும் மாவட்ட நுகர்வோர் பாதுகாப்பு கவுன்சில்களும் (Central, State and district consumer council) மத்திய நுகர்வோர் பாதுகாப்பு அதிகார அமைப்பும் (Central Consumer Protection Authority) அமைக்க நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் வழி வகுத்துள்ளது. (பிரிவுகள் 3, 6, 8 & 10)
நுகர்வோர் பிரச்சனைகள்
04. விலைக்கு வாங்கிய பொருளில் குறைபாடு இருக்கும்போதும் (defective goods) பணம் செலுத்திப் பெறும் சேவையில் சேவை வழங்குபவரால் குறைபாடு நிகழும் போதும் (deficiency in the service) நிர்ணிக்கப்பட்டதை விட கூடுதலான விலை கேட்கப்படும் போதும் (excessive price) பாதிக்கப்படுபவர் நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் புகார் தாக்கல் செய்யலாம்.
உயிருக்கும் உடமைக்கும் ஆபத்தான பொருள் அல்லது சேவை விற்பனை செய்யப்படும் போதும் நியாயமற்ற ஒப்பந்தம் (unfair contract), நியாயமற்ற வர்த்தக நடைமுறை (deficiency in the goods), கட்டுப்படுத்தப்பட்ட வர்த்தக நடைமுறை (restrictive trade practice) ஆகியவற்றை வணிகர் அல்லது சேவையை வழங்குபவர் கடைபிடிக்கும் போதும் உற்பத்தியாளர், விற்பனையாளர், சேவை வழங்குபவர் ஆகியோர் மீதான தயாரிப்பு பொறுப்பு (product liability) குறித்தும் நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் புகார் தாக்கல் செய்யலாம் (பிரிவு 2-6).
எங்கு புகார் தாக்கல் செய்வது?
05. ரூபாய் 50 லட்சம் மதிப்பு (sale consideration) வரை உள்ள பிரச்சனைகளை மாவட்ட நுகர்வோர் ஆணையங்களிலும் ரூபாய் 50 லட்சத்துக்கு மேல் ரூபாய் இரண்டு கோடிக்கு கீழ் மதிப்புள்ள பிரச்சினைகளை மாநில நுகர்வோர் ஆணையங்களிலும் ரூபாய் இரண்டு கோடிக்கு மேல் மதிப்புள்ள பிரச்சினைகளை தேசிய நுகர்வோர் ஆணையத்திலும் புகாராக தாக்கல் செய்ய வேண்டும். இந்த மதிப்பு என்பது செலுத்தப்பட்ட பணத்தின் அளவே ஆகும். எவ்வளவு தொகை இழப்பீடு வேண்டுமானாலும் எந்த ஆணையத்திலும் கேட்கலாம். (pecuniary jurisdiction)
ரூபாய் இரண்டு கோடிக்கு மேல் மதிப்புடைய நேரடியாக தாக்கல் செய்யப்படும் புகார்களையும் மாநில நுகர்வோர் குறைதீர் ஆணையத்தின் உத்தரவுகள் மீதான மேல்முறையீடுகளையும் (appeals) தேசிய நுகர்வோர் குறைதீர் ஆணையம் விசாரிக்கிறது. ரூபாய் 50 லட்சத்திற்கும் மேல்மதிப்புடைய நேரடியாக தாக்கல் செய்யப்படும் புகார்களையும் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தின் உத்தரவுகள் மீதான மேல்முறையீடுகளையும் மாநில நுகர்வோர் குறைதீர் ஆணையம் விசாரிக்கிறது. (Consumer Protection -Jurisdiction of the District Commission, the State Commission and the National Commission- Rules, 2021- revised)
எத்தகைய தீர்வுகளை பெறலாம்?
06. விற்பனை செய்யப்பட்ட பொருளில் உள்ள குறைபாடு (defective goods) உடைய பாகங்களை மாற்றி தருமாறும் முழுமையாக பொருளை மாற்றி புதிய பொருள் வழங்குமாறும் (replace) விற்பனை செய்யப்பட்ட பொருள் அல்லது வழங்கப்பட்ட சேவைக்கு செலுத்தப்பட்ட தொகையை திருப்பி தருமாறும் (refund) உற்பத்தியாளர் (manufacturer), விற்பனையாளர் (seller) அல்லது சேவை வழங்குபவர் (service provider) தரப்பில் சேவை குறைபாடு, நியாயமற்ற வர்த்தக நடைமுறை, குறைபாடான பொருள் விற்பனை, கூடுதல் பணம் வசூலித்தல் போன்றவற்றின் காரணமாக நுகர்வோருக்கு ஏற்பட்ட சிரமங்களுக்கு இழப்பீடு (compensation) வழங்குமாறும் கேட்டு நுகர்வோர் நுகர்வோர் ஆணையத்தை அணுகலாம்.
நியாயமற்ற வர்த்தக நடைமுறை அல்லது கட்டுப்படுத்தப்பட்ட வர்த்தக நடைமுறையை நிறுத்துமாறும் அவற்றை மீண்டும் செய்யக்கூடாது என்றும் அபாயகரமான அல்லது பாதுகாப்பற்ற பொருட்களை விற்பனை செய்யக்கூடாது என்றும் விற்பனைக்கு சந்தைக்கு அனுப்பப்பட்ட அபாயகரமான பொருட்களை திரும்பப் பெறுமாறும் அபாயகரமான சேவைகளை வழங்குவதை நிறுத்துமாறும் தவறாக வழிநடத்தும் விளம்பரங்களை வெளியிடுவதை நிறுத்துமாறும் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவிடலாம் (பிரிவு 39). (remedies for the consumers)
விசாரணை முறை
07. மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம் ஒரு புகாரை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளும் போது எதிர்தரப்பினர் தமது பதிலை 45 நாட்களுக்குள் சமர்ப்பிக்க வேண்டும். புகாரின் மீது விசாரணை நடத்தி 90 நாட்களுக்குள்ளும் ஆய்வக சோதனைகளுக்கு வழக்கிலுள்ள பொருள் உட்படுத்தப்பட வேண்டும் என்ற நிலையில் 135 நாட்களுக்குள்ளும் தீர்வு காணப்பட வேண்டும் (பிரிவு 38) (enquiry procedure). இந்த ஆணையங்களில் சமரச மையங்களும் (mediation) புதிய சட்டப்படி ஏற்படுத்தப்பட்டுள்ளன (பிரிவு 74).

சிறை தண்டனை
மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தின் உத்தரவுகளை செயல்படுத்த தவறினால் மூன்று ஆண்டுகள் வரை சிறைத் தண்டனையும் ஒரு லட்சம் வரை அபராதமும் விதிக்க சட்டத்தில் வழி செய்யப்பட்டுள்ளது (பிரிவு 72, execution of order). (மூன்றாம் பத்தி முதல் மேற்கண்ட பத்தி வரை உள்ள சங்கதிகள் அனைத்தும் டாக்டர் வீ. ராமராஜ் தலைமையிலான மாவட்ட நுகர்வோர் ஆணையம் வழங்கிய உத்தரவு ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளவை – நுகர்வோர் பல்வகை மனு எண்: 39/2022, மாவட்ட நுகர்வோர் ஆணையம் அரியலூர் தமிழ்நாடு)
தன்னிச்சையான நீதித்துறை
சட்டம் இயற்றும் பாராளுமன்றம் மற்றும் சட்டமன்றங்கள், மத்திய, மாநில அரசுகள் ஆகியவற்றின் தலையீடு இல்லாமல் பொதுமக்களுக்கு நீதி வழங்கப்பட வேண்டும் என்ற அடிப்படையில் சுதந்திரமான நீதித்துறை (independent judiciary) அமைப்பானது இந்திய அரசியலமைப்பால் ஏற்படுத்தப்பட்டுள்ளது. ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள நீதிமன்றங்கள் அனைத்தும் (district and subordinate courts) உயர்நீதிமன்றத்தின் (high court) கட்டுப்பாட்டிலும் மேற்பார்வையிலும் அனைத்து உயர்நீதிமன்றங்களும் உச்ச நீதிமன்றத்தின் (supreme court) கட்டுப்பாட்டிலும் மேற்பார்வையிலும் இயங்குகின்றன. நீதிமன்றங்களில் பணியாற்றும் நீதிபதிகள் மற்றும் பணியாளர்களின் நியமனம் மற்றும் பணி மாறுதல்கள் அரசின் கட்டுப்பாட்டில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
தீர்ப்பாயங்கள்
நீதித்துறையின் பணி சுமையை குறைப்பதற்காகவும் மக்கள் எளிதாக விரைவாக பரிகாரங்களை பெறுவதற்காகவும் பாதி அளவு நீதித்துறை (quasi- judicial) போன்ற அமைப்புகளாக மத்திய நிர்வாக தீர்ப்பாயம், வருமான வரி மேல்முறையீட்டு தீர்ப்பாயம், பசுமை தீர்ப்பாயம் என்ற பல்வேறு தீர்ப்பாயங்கள் இந்தியாவில் உச்ச நீதிமன்றத்தின் ஒப்புதலில் ஏற்படுத்தப்பட்டன இந்த தீர்ப்பாயங்களின் இறுதி உத்தரவு மீது உயர் நீதிமன்றத்தில் அல்லது உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய வழி செய்யப்பட்டுள்ளது. தீர்ப்பாயங்களைப் போலவே, நுகர்வோர் தகராறுகளை தீர்ப்பதற்காக நுகர்வோர் குறைதீர் ஆணையங்கள் நுகர்வோர் பாதுகாப்புச் சட்டத்தால் ஏற்படுத்தப்பட்டது.
அரசால் அமைக்கப்பட்டுள்ள தீர்ப்பாயங்கள் நுகர்வோர் குறைதீர் ஆணையங்கள் போன்றவற்றில் வழக்கை விசாரித்து நீதி வழங்குபவர்கள் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் என்ற பெயரில் நியமனம் செய்யப்படுகிறார்கள். தீர்ப்பாயங்கள் மற்றும் நுகர்வோர் ஆணையங்களின் தலைமை தன்னிச்சையாக செயல்பட்டாலும் தலைவர் மற்றும் உறுப்பினர்களை பணியிட மாற்றல் உத்தரவு பிறப்பிப்பது, நிதி ஒதுக்கீடு, உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்துதல் போன்றவை மத்திய மற்றும் மாநில அரசுகளின் சம்பந்தப்பட்ட துறையின் கீழ் உள்ளது. தீர்ப்பாயங்கள் மற்றும் நுகர்வோர் ஆணையங்களின் நிர்வாகம் நேரடியாக நீதித்துறையின் கீழ் இல்லை.
உச்ச நீதிமன்ற தீர்ப்பு
கடந்த 25 மே 2025 அன்று நுகர்வோர் நீதிமன்றங்கள் குறித்த தீர்ப்பு ஒன்றை நீதியரசர்கள் அபய் எஸ். ஓகேஏ, எம். எம். சுந்தரேஷ் ஆகியோர் வழங்கியுள்ளனர். CIVIL APPEAL NO. 9982 OF 2024, Arising out of SLP (C) No. 25612 of 2023) இந்தத் தீர்ப்பு இதுவரை நுகர்வோர் ஆணையங்கள் இருந்து வரும் அமைப்பு முறையை மாற்றுமா? என்பது தான் தற்போதைய விவாத பொருளாகும்.
நீதித்துறையின் கீழ் நுகர்வோர் நீதிமன்றங்கள்
நுகர்வோர் குறைதீர் ஆணையங்கள் (Consumer Commission) என்பதை நுகர்வோர் நீதிமன்றம் (Consumer Court) அல்லது நுகர்வோர் தீர்ப்பாயம் (Consumer Tribunal) என்று மாற்றி நிரந்தரமான அமைப்பாக உருவாக்கலாமா? இவற்றிற்கு நீதித்துறையில் பணியில் உள்ள நீதிபதிகளை (sitting Judges) நியமிக்கலாமா? என்பது குறித்து மத்திய அரசு மூன்று மாதங்களுக்குள் தங்களது கருத்தை உச்ச நீதிமன்றத்திற்கு தெரிவிக்க வேண்டும் என்று தற்போதைய உச்ச நீதிமன்ற தீர்ப்பில் உத்தரவிடப்பட்டுள்ளது.
நீதி வழங்கும் பணி அரசியல் அமைப்பின் அதிகார பிரிவினை கோட்பாட்டின்படி நீதிமன்றங்களுக்கு வழங்கப்பட்டு உள்ளது. இருப்பினும் தற்போது நீதித்துறையில் இருந்து அரசின் நிர்வாகத்தில் உள்ள தீர்ப்பாயங்கள் மற்றும் நுகர்வோர் ஆணையங்கள் உள்ளிட்ட அவற்றின் ஆதிக்கத்தை விட்டுத் தர பொதுவாக அரசு விரும்பாது என்றும் நுகர்வோர் ஆணையத்தின் நிர்வாகத்தை நீதித்துறையின் கீழ் விட்டுக் கொடுத்தால் இதே போலவே வருங்காலத்தில் மற்ற தீர்ப்பாயங்களுக்கும் தீர்ப்பாயங்களின் நிர்வாகத்தையும் நீதித்துறையின் கீழ் விட்டுக் கொடுக்க வேண்டிய நிலைமை ஏற்படும் என்றும் அரசு கருதலாம் என்பது அரசியல் பார்வையாளர்களின் கருத்தாக உள்ளது.
நுகர்வோர் ஆணையங்களை நுகர்வோர் தீர்ப்பாயம் அல்லது நுகர்வோர் நீதிமன்றம் என்று பெயரை மாற்றி நீதித்துறையில் பணியாற்றும் நீதிபதிகளை நுகர்வோர் நீதிமன்றங்களில் பணியாற்ற அனுமதித்தால் நீதிபதிகள் மீதான கட்டுப்பாட்டை நீதித்துறை வைத்திருக்கும். இதற்கு ஒருவேளை மத்திய அரசு ஒப்புதல் வழங்கினால், நுகர்வோர் நீதிமன்றங்கள் நேரடியாக நீதித்துறையின் கீழ் ஒருங்கிணைக்கப்படலாம் (direct integration) அல்லது மாவட்ட நுகர்வோர் நீதிமன்றம், மாநில நுகர்வோர் நீதிமன்றம், தேசிய நுகர்வோர் நீதிமன்றம் ஆகிய அமைப்புகள் தனி பிரிவாக (separate body under judiciary) நீதித்துறையின் கீழ் கொண்டுவரப்படலாம். அதாவது, மாவட்ட நுகர்வோர் நீதிமன்றங்களின் நிர்வாகமானது உயர்நீதிமன்றத்தில் ஒரு பிரிவின் கீழ் வழங்கப்பட்டு, அதற்கு பொறுப்பாக ஒரு உயர் நீதிமன்ற நீதிபதியை (Portfolio judge) நியமனம் செய்வது, மாநில நுகர்வோர் நீதிமன்றங்களின் நிர்வாகமானது உச்ச நீதிமன்றத்தில் ஒரு பிரிவின் கீழ் வழங்கப்பட்டு, அதற்கு பொறுப்பாக ஒரு உச்ச நீதிமன்ற நீதிபதியை (Portfolio judge) நியமனம் செய்வது போன்ற நடைமுறையில் கொண்டு வரப்படலாம்.
இத்தகைய மாற்றங்களை கொண்டுவர தற்போதைய நுகர்வோர் பாதுகாப்புச் சட்டத்தில் தேவையான திருத்தங்களை (amendment) பாராளுமன்றம் மேற்கொள்வது அவசியமானதாகும்.
புதிய நியமனங்கள்
நுகர்வோர் ஆணையங்களில் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் நியமனம் செய்யப்பட்டு நீதி பரிபாலன பணியை செய்து வருகிறார்கள். தேசிய நுகர்வோர் ஆணையத்தின் தலைவராக பணியாற்றுபவர் ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதியாகவும் மாநில நுகர்வோர் ஆணையத்தின் தலைவராக பணியாற்றுவார் ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதியாகவும் உள்ளார். மாவட்டங்களில் நுகர்வோர் ஆணையங்களின் மாவட்ட நுகர்வோர் ஆணையங்களின் தலைவராக பணியாற்றுபவருக்கு டிஸ்ட்ரிக்ட் ஜட்ஜ் சூப்பர் டைம் ஸ்கேல் (District Judge Super Time Scale) என்பது வழங்கப்பட்டுள்ளது. மாவட்ட நுகர்வோர் ஆணைய உறுப்பினர்களுக்கு மாநில அரசின் துணைச் செயலாளருக்கான சம்பள விகிதத்தை தற்போதைய சட்டம் வழங்கியுள்ளது.
இந்த நிலையில் உச்ச நீதிமன்றம் தற்போது வழங்கியுள்ள தீர்ப்பில் மாவட்ட நுகர்வோர் ஆணையங்களுக்கு ஓய்வு பெற்ற மாவட்ட நீதிபதி அல்லது பணியில் உள்ள மாவட்ட நீதிபதியை மட்டுமே நியமிக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதற்கு தேவையான புதிய விதிகளை உருவாக்கி நான்கு மாதங்களில் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யுமாறு மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் கடந்த 2022 ஆம் ஆண்டில், மாவட்ட நீதிபதியாக தேர்வு செய்ய தகுதி வாய்ந்த வழக்கறிஞர்கள் உயர் நீதிமன்ற நீதிபதி தலைமையிலான தேர்வு குழு நடத்திய போட்டி தேர்வில் (competitive examination) வெற்றி பெற்று நேர்முகத் தேர்வு மூலமாக மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தின் தலைவர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இதே முறையில் மாவட்ட நுகர்வோர் ஆணையங்களின் உறுப்பினர்களும் நியமனம் செய்யப்பட்டுள்ளார்கள். இவ்வாறு தேர்வு செய்யப்பட்டவர்களில் 90 சதவீதத்தினர் வழக்கறிஞர்கள் ஆவார்கள். இவர்கள்தான் தமிழகம் முழுவதும் உள்ள மாவட்ட நுகர்வோர் ஆணையங்களில் பணியாற்றி வருகிறார்கள். இதே நிலை தான் இந்தியா முழுவதும் உள்ளது.
தற்போதைய உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி வழக்கறிஞர்கள் நேரடியாக மாவட்ட நுகர்வோர் ஆணையங்களில் தலைவர் மற்றும் உறுப்பினர்களாக நியமனம் பெற முடியுமா? என்பது கேள்விக்குறியாகும். இதற்கு அகில இந்திய பார் கவுன்சில் மற்றும் மாநில பார் கவுன்சல்களின் கருத்து என்ன என்பது தெரியவில்லை. வழக்கறிஞர்களை உயர்நீதிமன்ற நீதிபதியாக நேரடியாக நியமிக்க அரசியலமைப்பு வழி செய்து உள்ள நிலையில் நுகர்வோர் நீதிமன்றங்களில் அத்தகைய நிலை இல்லாமல் மாறப் போகிறது என்பதை நாடு முழுவதும் உள்ள வழக்கறிஞர்கள் சங்கங்கள் ஆதரிக்கிறார்களா? அல்லது எதிர்க்கிறார்களா என்ற கருத்து எதுவும் தெரியவில்லை.
ஏற்கனவே இருப்பவர்கள்
தற்போதைய சட்டப்படி நுகர்வோர் ஆணையங்களில் தலைவர் மற்றும் உறுப்பினர்களாக தேர்வு செய்யப்படுபவர்கள் நான்காண்டு காலம் பணியாற்றுவார்கள். அதன் பின்பு மீண்டும் ஒருமுறை நான்காண்டு காலம் பணியாற்ற அவர்களுக்கு தடை இல்லை. தற்போது வழக்கறிஞர்களாக இருந்து முதல் முறையாக நியமனம் செய்யப்பட்டு முதலாவது நான்காண்டு காலம் பணியாற்றுபவர்களுக்கு மீண்டும் இரண்டாவது முறைக்கான மறு நியமனம் (re-appoinement) செய்யப்படுமா? என்பது உச்சநீதிமன்ற உத்தரவுப்படி மத்திய அரசு வகுக்கும் விதிகளில்தான் இருக்க போகிறது.
நீதித்துறையில் நீதிபதியாக பணியாற்றுபவர்கள் அல்லது பணி ஓய்வு பெற்றவர்கள் மட்டுமே புதிதாக நுகர்வோர் ஆணையங்களில் நியமனம் செய்யப்பட வேண்டும் என்ற உச்ச நீதிமன்ற உத்தரவுபடி நியமன விதிகள் வகுக்கப்பட்டால் தற்போது முதல் முறை காலத்தை நான்காண்டு காலத்தில் பணியாற்றும் தலைவர் மற்றும் உறுப்பினர்களுக்கு இரண்டாவது முறை பணியாற்றுவதற்கான தகுதி இல்லாமல் போகலாம்.
மாவட்ட நுகர்வோர் ஆணையங்களில் தலைவராக உள்ளவர்கள் நீதித்துறை சம்பள விகிதத்தில் ஏற்கனவே நியமனம் பெற்று பணியாற்றி வருவதால் அவர்களை பணியில் உள்ள நீதிபதிகளாக கருதி மறு நியமனத்துக்கு உரிய விதிகளை மத்திய அரசு உருவாக்கப்படக் கூடும் என்று ஒரு சாரார் தெரிவிக்கிறார்கள். இதே நிலை தற்போது பணியில் உள்ள மாவட்ட உறுப்பினர்களுக்கும் வழங்கப்படுமா? என்பது தெரியவில்லை. தங்களது கோரிக்கையை தற்போது பணியில் உள்ளவர்கள் மத்திய அரசின் நுகர்வோர் பாதுகாப்பு துறைக்கு சமர்ப்பிப்பது உகந்தது என்று சிலர் தெரிவிக்கிறார்கள்.
நுகர்வோர் ஆணையங்களின் தலைவர் மற்றும் உறுப்பினர்களின் பதவிக்காலத்தை 5 ஆண்டுகளாக நிர்ணயம் செய்து தற்போதைய உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. அதே சமயம் தற்போது பணியில் இருப்பவர்களுக்கு இந்த ஐந்தாண்டு காலம் என்பது பொருந்தாது என்றும் அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
டி ஆர் டி மாடல்
மாவட்ட நுகர்வோர் ஆணையங்களில் தலைவருக்கு டிஸ்ட்ரிக்ட் ஜட்ஜ் சூப்பர் டைம் ஸ்கேல் சம்பளம் வழங்கப்படுவது போல அங்குள்ள இரண்டு உறுப்பினர்களுக்கும் டிஸ்ட்ரிக்ட் ஜட்ஸ் செலக்சன் கிரேடு சம்பளம் வழங்கப்பட வேண்டும் என்று சமீபத்திய உச்ச நீதிமன்ற தீர்ப்பு ஒன்றில் உத்தரவிடப்பட்டுள்ளது. இதன் காரணமாக ஒவ்வொரு மாவட்ட நுகர்வோர் ஆணையத்திலும் மூன்று மாவட்ட நீதிபதிகளுக்கான சம்பளத்தை வழங்க வேண்டிய நிலை இருப்பதால் சிக்கன நடவடிக்கைகளை எவ்வாறு மேற்கொள்வது என்று அரசு ஆராய்ந்து வருவதாக தெரிகிறது.
டிஆர்டி (DRT) எனப்படும் கடன் வசூல் தீர்ப்பாயங்களில் நீதிபதியாக தலைவர் மட்டுமே உள்ளார். அங்கு உறுப்பினர்கள் கிடையாது. இதேபோன்று, நுகர்வோர் ஆணையங்களை நுகர்வோர் தீர்ப்பாயங்களாக மாற்றி மாவட்ட நீதிபதி நிலையில் ஒரே ஒரு தலைவருடன் பணியில் உள்ள நீதிபதிகளை நியமனம் செய்யும் வகையில் நுகர்வோர் பாதுகாப்புச் சட்டத்தை திருத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படலாம் என்று சில சட்ட நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள்.
நுகர்வோர் பூங்கா (The Consumer Park) கருத்து: விரைவாகவும் எளிதாகவும் மக்களுக்கு நுகர்வோர் நீதி கிடைக்கும் வகையில் நீதித்துறையின் கீழ் சுதந்திரமான நுகர்வோர் நீதிமன்றங்களை உருவாக்க தேவையான சட்ட திருத்தங்கள் கொண்டு வரப்பட வேண்டும்.