பணம் செலுத்தி முடிக்கப்பட்ட கடன் கணக்கை தனியார் நிறுவனத்திற்கு வங்கி விற்றது தொடர்பான வழக்கில் கடந்த மாதம் நாமக்கல் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. தீர்ப்பு வழங்கிய 16 நாட்களில் இழப்பீட்டுத் தொகையையும் வருத்தம் தெரிவித்து கடிதத்தையும் வாடிக்கையாளருக்கு வங்கி வழங்கி உள்ளது.
நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு அருகே உள்ள ஆண்டிபாளையத்தில் வசித்து வருபவர் மனோகரன் மகன் அருண் பிரசாத் (35). கடந்த 2007 நவம்பர் மாதத்தில் திருச்செங்கோட்டில் உள்ள அரசுக்கு சொந்தமான வங்கி ஒன்றில் ரூ 2,57,000/- கல்வி கடன் பெற்றுள்ளார். அவரது தந்தை கடனுக்கு ஜாமீன் கையெழுத்து செய்துள்ளார்.
சரிவர கடன் தொகைகளை செலுத்தாததால் கடந்த 2017, மார்ச் மாதத்தில் அருண் பிரசாத் மற்றும் அவரது தந்தை மீது வங்கி சிவில் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்து உள்ளது. 2017 ஏப்ரல் மாதத்தில் தந்தையும் மகனும் வங்கிக்கு கடனை செலுத்தி விட்டனர். அப்போதே அவர்களுக்கு கடன் முடிக்கப்பட்டதற்கான சான்றிதழை வங்கி வழங்கி உள்ளது.
கடனை செலுத்திய பின்னரும் மனோகரன், அருண் பிரசாத் மீது தாக்கல் செய்யப்பட்டு இருந்த வழக்கை வங்கி திரும்பப் பெறவில்லை. மேலும், இவர்களுடைய வங்கி கடன் கணக்கை ரிலையன்ஸ் அசட்ஸ் ரீகன்ஸ்ட்ரக்சன் கம்பெனிக்கு வங்கி விற்று விட்டது. மனோரனும் அருண் பிரசாத் ம் ஏழு லட்சம் செலுத்த வேண்டும் என்று அந்த கம்பெனியினர் வற்புறுத்தியுள்ளனர்.
அதிர்ச்சி அடைந்த தந்தையும் மகனும் வங்கியின் மீதும் அசட்ஸ் ரீகன்ஸ்ட்ரக்சன் கம்பெனி மீதும் நாமக்கல் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில் கடந்த 2024 ஆகஸ்ட் மாதத்தில் வழக்கு தாக்கல் செய்தனர். இந்த வழக்கில் கடந்த ஜனவரி 7 ஆம் தேதி தேதியன்று நாமக்கல் மாவட்ட நுகர்வோர் நீதிபதி டாக்டர் வீ. ராமராஜ் தலைமையிலான அமர்வு தீர்ப்பு வழங்கியது. இத்தீர்ப்பில், வங்கியின் சேவை குறைபாட்டால் வழக்கு தாக்கல் செய்தவர்களுக்கு இழப்பீடாக ரூபாய் ஐந்து லட்சத்தை வங்கி வழங்கவும் முடிக்கப்பட்ட கடன் கணக்கை தனியார் நிறுவனத்திற்கு விற்பனை செய்தது தவறு என்று கடிதம் வழங்கவும் நாமக்கல் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றம் வங்கிக்கு உத்தரவிட்டது.
(தொடர்ச்சி கீழே உள்ள அட்டவணை செய்திகளுக்கு கீழ்)

இந்நிலையில், கடந்த ஜனவரி 23 அன்று வங்கியின் சார்பில் மனோகரன் மற்றும் அருண் பிரசாத் ஆகியோருக்கு வங்கி இழப்பீட்டுத் தொகையை வழங்கி உள்ளது. பணம் செலுத்தப்படாத பல கல்வி கடன் கணக்குகளை தனியார் நிறுவனத்திற்கு விற்பனை செய்த போது தவறுதலாக அருண்பிரசாத்தின் கல்விக் கடன் கணக்கும் அவர்களுக்கு வழங்கப்பட்டு விட்டது. இதனால் ஏற்பட்ட சிரமத்துக்கு வருந்துகிறோம் என வங்கியின் சார்பில் அவர்களுக்கு வழங்கப்பட்ட கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. நீதிமன்ற தீர்ப்பை நிறைவேற்றி விட்டதாக வங்கியின் சார்பில் 06 பிப்ரவரி 2025 -ல் நுகர்வோர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
வங்கிகளில் கடன் வாங்கியவர்கள் உரிய காலத்தில் கடனை திருப்பி செலுத்த விட்டால் வரா கடனாக வங்கிகள் கணக்கு வைக்கிறார்கள். வங்கிகளின் வராகடன்களை குறிப்பிட்ட பணத்தைப் பெற்றுக் கொண்டு அசட்ஸ் ரீகன்ஸ்ட்ரக்சன் கம்பெனிகளுக்கு கடன் கணக்கை விற்று விடுகின்றனர். வங்கி கடன் கணக்கை விற்பனை செய்தது தெரியாமல் திடீரென தனியார் நிறுவனங்களில் இருந்து கடனை செலுத்துமாறு கேட்டு வரும் அழைப்புகளால் மக்களுக்கு குழப்பம் ஏற்படுவதை தவிர்க்க, வங்கி கடன் கணக்கை விற்பனை செய்தால் சம்பந்தப்பட்ட வாடிக்கையாளருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்பதே மக்களின் விருப்பமாக உள்ளது.
நுகர்வோர் பூங்கா (The Consumer Park) கருத்து: நீதிமன்ற தீர்ப்புகளை சம்பந்தப்பட்ட தரப்பினர்கள் உடனடியாக நிறைவேற்றினால் மக்கள் மகிழ்ச்சி அடைவார்கள்.



