spot_img
October 18, 2024, 2:24 pm
spot_img

தோத்தாவிதி, ஜெயிச்சா நானுங்கிறது டுபாக்கூர் ஃபார்முலா

நண்பன் ஒருவன் பிஸினஸ் முயற்சி தோற்றதில் வருத்தத்தில் இருந்தான். பணநஷ்டம் அதிகமில்லை, தோல்வியால் வந்த மனக் கஷ்டம்தான் அதிகம். பணம், காசு தருகிறோமோ இல்லையோ, கஷ்டத்தில் இருக்கிறவனை நேரில் பார்த்து ஆறுதலாகவோ, ஊக்குவிக்கிற மாதிரியோ, நாலு வார்த்தை பேசுவது அவர்கள் கஷ்டத்திலிருந்து மீண்டு வருவதற்கு உதவியாக இருக்கும். போனேன்.

ஒரு மாதமாகச் சிரைக்காத முகம். அழுக்கு லுங்கி, கிழிசல் பனியன் என்று சோகக் காட்சிக்கு ஏற்ற தோற்றம்.  ஆல் இண்டியா ரேடியோவில் பெரிய தலைவர்கள் செத்துப் போகும் போது வாசிக்கும் தில்ரூபாவைப் பின்னணி இசையாகப் போட்டால் மிக பொருத்தமாக இருக்கும். 

”எல்லாம் என் தலைவிதி, இப்படியெல்லாம் ஆகணும்ன்னு இருக்கு. அதை எப்படி மாத்த முடியும்?” என்று நொந்து கொண்டான். சோகக் காட்சியில் நடிக்கும் மௌலி போல பேச்சுக்கு நடுவே அவ்வப்போது மூக்கை மட்டும் உறிஞ்சிக் கொண்டான்.

“போகட்டும் விடு, வந்தவனுக்கு ஒரு காபி தர மாட்டியா?’ என்றேன் சிரித்துக் கொண்டே. “சாரி டா. வய்ஃப் ஊர்ல இல்லை. எனக்கு காஃபி போடத் தெரியாது…’ என்று இழுத்தான்.

”கிச்சன்ல எது எங்கே இருக்குன்னு சொல்லு, ரெண்டு பேருக்கும் நான் காபி போடறேன்” என்று காபி போட்டுக் கொண்டே அவனோடு பேசினேன்.

“உன் கேரியர் நல்லா இருந்தது. பைனான்ஷியலா உனக்கு எந்தக் கஷ்டமும் இல்லை. நீ ……. கம்பெனியிலேதான் முதல்லே  வேலைக்குச் சேர்ந்தே இல்லே? அங்கே வேலை கிடைக்கிறது ரொம்ப சிரமம்ன்னு சொல்வாங்களே?” என்று பழசைக் கிண்டினேன்.

“முப்பது பேர் வந்திருந்தாங்க ரிட்டன் டெஸ்ட்டுக்கு” என்று உற்சாகமாக ஆரம்பித்தான். முப்பதில மூணு பேரைத்தான் “இண்டர்வியூவுக்கு செலக்ட் பண்ணாங்க. இ ஈஸ் ஈக்வல் டு எம் ஸி டி ங்கிற ஈக்வேஷன் தந்திருந்தாங்க. அதைப் பத்தி பிரமாதமா எழுதினது நாந்தானாம். கம்பெனி எலட்ராலிஸிஸ் கம்பெனி ஆச்சே, செலக்ட் ஆய்ட்டேன்” என்றான். 

“எப்படி உனக்கு ஸ்ட்ரைக் ஆச்சு?  நீ படிச்சது மெக்கானிக்கல் ஆச்சே?’

“கரெக்டு. மூணு ஆப்பர்ச்சூனிட்டி போயாச்சு. இந்த வேலையை எப்படியாவது பிடிச்சிடணன்னு உள்ளே ஒரு உத்வேகம். மூளையை கசக்கிக்கிட்டு யோசிச்சேன். பத்தாங்கிளாஸ்ல படிச்சது ஞாபகம் வந்தது” என்றான்.

“ம்ம்ம்.. குட். பை தி வே, கிச்சனை நல்லா நீட்டா வச்சிருக்கா உன் வய்ஃப்” 

“கிச்சனை மட்டுமா? மொத்த வீட்டையும், என்னையும் கூட நல்லா வச்சிருக்கா” என்றான்.

“இது மாதிரி மனைவி கிடைக்க நீ கொடுத்து வைத்தவன் லக்கி”

“இவளை லவ் பண்ண நான் என்னல்லாம் பண்ணேன்னு உனக்குத் தெரியுமில்லே? எத்தனை எதிர்ப்பு, எவ்வளவு தடங்கல்! அவ்வளவையும் ஜெயிச்சி வெற்றி வீரனா இவளைக் கல்யாணம் பண்ணிகிட்டேன். லக்கின்னு மூன்று எழுத்தில சொல்லிட்டே?” என்றான்.

“தலைவிதின்னா என்னடா மாப்ளே?’ என்றேன் காபியை தந்து கொண்டே. 

“முன்னரே விதிக்கப்பட்டது. இதிது இப்படி இப்படித்தான் நடக்கணும்ன்னு” என்றான்.

“உனக்குக் கிடைச்ச வேலையும், மனைவியும் உன் திறமைக்கு கிடைத்ததா அல்லது தலைவிதிதானா? என்றான்.

“தலைவிதின்னா சொல்றே?’ என் முயற்சியால் கிடைத்தது மனைவி. திறமையால் கிடைத்தது வேலை. இந்நிலையில் நல்ல மனைவி – நல்ல வேலை தலைவிதியால் கிடைத்தது என்று எவனாவது சொல்வானா? என்ன பேசறே நீ? பைத்தியக்காரத்தனமா இருக்கே?” என்றான்.

“கெடுதலை மட்டும்தான் கடவுள் விதிக்கிறாரா? நல்லதை எல்லாம் தானே  உருவாக்கிக்கிற சர்வ வல்லமை படைச்சவனா நீ?”

“அப்படீன்னா?” என்றான்.

விதியை நம்பினேன்னா, நல்லது, கெட்டது ரெண்டுமே விதிக்கப்பட்டதுன்னு நம்பணும். முயற்சியை நம்பினேன்னா தோல்விகளுக்கும் காரணம் நாமதான்னு ஒத்துக்கணும். தோத்தா விதி, ஜெயிச்சா நானுங்கிறது டுபாக்கூர் ஃபார்முலா”

“நீ என்ன சொல்ல வர்ரே?’ விதி, முயற்சி ஏதாவது ஒரு ரூட்ல போ. ரெண்டுமே ஓக்கேதான்.  இதுவுமில்லாம அதுவுமில்லாம நடுவில நடந்தா ஊர்போய்ச் சேர முடியாது. ஏன்னா நடுவில ரூட்டே இல்ல…. என்ன நான் சொல்றது சரிதானே?.

“நீ சொல்றது புரியுது. குழப்பத்தில் இருந்த என்னை அதுல இருந்து வெளியே கொண்டு வந்து இருக்க. இந்த நிமிசத்துல இருந்து மீண்டும் முயற்சிக்கிறேன் கண்டிப்பாக மீண்டும் வெற்றி பெறுவேன்” என்றான். முயற்சியும் திறமையும் இருந்தால் எத்தனை முறை தோற்றாலும் மீண்டும் வெற்றி பெறலாம் என்ற நம்பிக்கை விதையை நண்பனிடம் விதைத்த உற்சாகத்தோடு அவனிடம் விடை பெற்றேன்.

க.கதிர்வேல்
க.கதிர்வேல்
க.கதிர்வேல், ஊடகவியலார்

தொடர்புடைய கட்டுரைகள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -Central Learning campus

சமீபத்திய கட்டுரைகள்