spot_img
October 18, 2024, 10:27 am
spot_img

விழாக் காலங்களில் தலை தூக்கும் ஆம்னி பஸ் கட்டண உயர்வுகள் – நியாயமற்ற வர்த்தக நடைமுறையா?

ஒரு நகரத்திலிருந்து மற்றொரு நகரத்துக்கு அல்லது ஒரு கிராமத்துக்கு  மக்கள் பயணிப்பதற்காக பேருந்துகளை அரசு இயக்குகிறது. இத்தகைய பயணிகள் பேருந்துகளை இயக்குவதற்கு   அரசின் போக்குவரத்து துறை தனியார்களுக்கும் அனுமதி (passenger bus route permit) வழங்கியுள்ளது. இதனைத் தவிர தொழிற்சாலையில் பணி புரியும் தொழிலாளர்களை அழைத்துச் செல்லும் பேருந்துகளுக்கும் பள்ளி கல்லூரிகளுக்கு மாணவ, மாணவியரை அழைத்துச் செல்லும் பேருந்துகளுக்கும் குறிப்பிட்ட வழிதடத்தில் இயங்கிக் கொள்ள அரசால் அனுமதி வழங்கப்படுகிறது. சுற்றுலாப் பயணிகளை அழைத்துச் செல்லும் பேருந்துகளுக்கு தனி அனுமதி (tourist permit) போக்குவரத்து துறையால் வழங்கப்படுகிறது.

ஒரு நகரத்திலிருந்து மற்றொரு நகரத்துக்கு அல்லது ஒரு கிராமத்துக்கு  மக்கள் பயணிப்பதற்காக இயக்கப்படும் பேருந்துகள் அரசால் அனுமதிக்கப்பட்ட வழித்தடத்தில் மட்டுமே இயக்கப்பட இயலும். இந்த வழித்தடத்தில்  இடையில்   உள்ள நகரம் மற்றும் கிராமங்களில் பயணிகளை இறக்கி விடவும் ஏற்றிக் கொள்ளவும் அனுமதி பெற்ற பேருந்துகளுக்கு மோட்டார் வாகன சட்டம் ஸ்டேஜ் கேரியர் பெர்மிட் (stage carrier permit) என வரையறை செய்துள்ளது. சுற்றுலாவிற்கும் (tour permit) ஒப்பந்த அடிப்படையிலும் (contract permit) பயணிகளை பேருந்து ஏற்றிச்செல்ல வழங்கப்படும் அனுமதிகள் ஸ்டேஜ் கேரியர் பெர்மிட் வகையை சேர்ந்தவை அல்ல.

ஸ்டேஜ் கேரியர் பெர்மிட்  வகையை சேராத ஆம்னி பேருந்துகள் தினமும் குறிப்பிட்ட வழித்தடத்தில் பயணிகளுக்கு பயண சீட்டு வழங்கி இயக்குவது   மோட்டார் வாகன சட்டப்படி நியாயமற்றதாகும். இந்த வகை பேருந்துகளில்தான் விழா காலங்களில் விண்ணை தொடும் பயண கட்டணங்கள் நிர்ணயம் செய்யப்படுகின்றன. இந்த பேருந்துகளை நெறிப்படுத்த சரியான சட்டம் அமலில் இருப்பதாக தெரியவில்லை.

கோயம்புத்தூர் மாவட்டம், எட்டிமடை பிரிவு அருகே வசிக்கும் கிருஷ்ணமூர்த்தி என்பவர் நுகர்வோர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு ஒன்றில் ஆம்னி பேருந்தில்  முன்பதிவு செய்த நிலையில்   பயணியை ஏற்ற மறுத்த ஆம்னி பேருந்து நிர்வாகமும் பயண  முன்பதிவு செயலியை (bus booking app) இயக்கும்   நிர்வாகமும் தலா ரூ  25,000/- இழப்பீடு வழங்க வேண்டும்  என  கடந்த 2023 ஏப்ரல் மாதத்தில்   நாமக்கல் மாவட்ட நுகர்வோர் நீதிபதி டாக்டர் வீ. ராமராஜ் தலைமையிலான அமர்வு தீர்ப்பளித்தது.  

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையில் வசிக்கும் ஜெயச்சந்திரன் என்பவர் தனியார் ஆம்னி பேருந்து மீது சேவை குறைபாடு தொடர்பாக தாக்கல் செய்த வழக்கு ஒன்றில் கடந்த 2023 ஆகஸ்ட் மாதத்தில் தீர்ப்பு வழங்கிய நாமக்கல் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றம் பயணிக்கு ரூ  25,000/- இழப்பீடு வழங்க உத்தரவிட்டது. 

பெங்களூரில் இருந்து சென்னைக்கு ஆம்னி பேருந்து ஒன்று  ஸ்டேஜ் கேரியர் ஆக செயல்பட்டு பயணிகளை அழைத்துச் சென்ற போது ஆம்பூர் அருகே கடந்த 2017 ஆம் ஆண்டு நடந்த விபத்தில் பேருந்துக்கு ஏற்பட்ட   சேதத்துக்கு இழப்பீடு   வழங்க இன்சூரன்ஸ் நிறுவனம் மறுத்ததால் தொடரப்பட்ட வழக்கில் நாமக்கல் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புதான் இந்த கட்டுரையை எழுத காரணமாக அமைந்தது. இந்த தீர்ப்பில் அருணாச்சல பிரதேசத்தில் சுற்றுலா பேருந்துக்கான அனுமதியை பெற்று விட்டு ஸ்டேஜ் கேரியராக   பேருந்தை இயக்கும் போது ஏற்பட்ட விபத்துக்கு இழப்பீடு வழங்க உத்தரவிட முடியாது என நீதிமன்றம் தீர்ப்பில் தெரிவித்துள்ளது. 

ஸ்டேஜ் கேரியர் பெர்மிட் இல்லாத பேருந்துகள் ஒரு குறிப்பிட்ட இடத்திலிருந்து ஒரு குறிப்பிட்ட இடத்திற்கு செல்லும் போது பயண சீட்டு வழங்கி பயணிகளை எங்கிருந்து வேண்டுமானாலும் ஏற்றிக்கொண்டு, இறக்கி விட்டு செல்வது தங்களுக்கு ஸ்டேஜ் கேரியர் பெர்மிட் உள்ளது என பயணிகளுக்கு தெரிவிப்பதற்கு ஒப்பான செயலை செய்வதாகும். இத்தகைய செயல் நுகர்வோர் பாதுகாப்பு சட்டப்படி நியாயமற்ற வர்த்தக நடைமுறையாகும். இதனை நுகர்வோர் பாதுகாப்பு சட்டப்படி தடை செய்ய மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்துக்கு அதிகாரம் உள்ளது. ஸ்டேஜ் கேரியர் பெர்மிட் இல்லாமல் ஸ்டேஜ் கேரியர் பெர்மிட் உள்ள வாகனங்களை போல செயல்படும் பேருந்துகளை கண்டறிந்து நியாயமற்ற வர்த்தக நடைமுறையை நிறுத்த வேண்டியது போக்குவரத்து துறையின் கடமையாகும். இதனை ஒழுங்கு படுத்த சரியான நெறிப்படுத்துதல் சட்டம் (regulatory law) ஒன்றை இயற்றி பயணிகளுக்கு உரிய பாதுகாப்பையும் சேவையையும் பெற்றுத் தர வேண்டியது அரசின் கடமையாகும்.

நுகர்வோர் பூங்கா
நுகர்வோர் பூங்கா
நுகர்வோர் பூங்காவின் படைப்பு

தொடர்புடைய கட்டுரைகள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -Central Learning campus

சமீபத்திய கட்டுரைகள்