spot_img
October 18, 2024, 2:15 pm
spot_img

வீடு வாங்க போனா எப்படி எல்லாம் ஏமாத்துறாங்க! கட்டாத வீட்டுக்கு ஜிஎஸ்டி வரி பிடித்தம்!

தெலுங்கானா மாநிலம், ஹைதராபாத் நகர், பஞ்சாரா ஹில்ஸ், இரண்டாவது சாலை, விவேகானந்தா என்கிளேவ், பிளாட் எண் 28 -ல் வசித்து வருவோர் பி. வி. ரமண ரெட்டி மனைவி ஏ.  சியாமளா ரெட்டி. லோதா ஹெல்தி கன்ஸ்ட்ரக்ஷன்ஸ் அண்ட் டெவலப்பர்ஸ் பிரைவேட் லிமிடெட் என்ற கட்டுமான நிறுவனம் அடுக்குமாடு குடியிருப்பு (apartment) ஒன்றை கட்ட திட்டமிட்டுள்ளதாகவும் அதனை விற்பனை செய்வதற்காக முன்பதிவு செய்து வருவதாகவும் கூறியதன் அடிப்படையில் சியாமளா ரெட்டி “அந்த நிறுவனம் கட்டும் அடுக்குமாடி குடியிருப்பில் ஆறாவது தளத்தில் நான்கு அறைகள்  மற்றும் சமையலறை உள்ளிட்டவை அடங்கிய வீட்டை  வாங்குவதற்காக பேச்சுவார்த்தை நடத்தி இறுதியில்   கட்டுமான நிறுவனம் கட்டிக் கொடுக்கும் வீட்டின் விலை ரூ2,28,38,517/- என” இறுதி செய்துள்ளார்.

வாய்மொழி ஒப்பந்தப்படி ரூ 4,50,000/- முன் பணமாக கட்டுமான நிறுவனத்திற்கு கடந்த 2011 ஏப்ரல் 25 அன்று சியாமளா செலுத்தியுள்ளார். பணம் செலுத்திய உடனே முன்பதிவு விண்ணப்பத்தை கட்டுமான நிறுவனம் வழங்கி எந்தெந்த தேதிகளில்? எவ்வளவு தொகை கட்ட வேண்டும்? என்ற விவரத்தை தெரிவித்ததோடு, அடுக்குமாடி குடியிருப்பை கட்டி முடித்து 2013 ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் வீட்டின் சுவாதீனத்தை ஒப்படைப்பதாக கட்டுமான நிறுவனம் தெரிவித்துள்ளது.

அடுக்குமாடி குடியிருப்புகளை கட்ட தொடங்குவதற்கு முன்பே கட்டுமான நிறுவனம் சியாமளாவிடம் பணம் செலுத்துமாறு கொடுத்து அழுத்தத்தின் காரணமாக அவரும் கடந்த 2011 ஆகஸ்ட் மாதத்தில் ரூபாய் 50 லட்சத்தை செலுத்தியுள்ளார். இதன் பின்னர் கட்டுமான நிறுவனத்தின் சார்பில் ஒப்பந்தம் ஒன்றை சியமலாவிற்கு அனுப்பி உள்ளார்கள். அதனை படித்துப் பார்த்தபோது அதன் சில நிபந்தனைகள் இயற்கை நீதிக்கு எதிரானதாக இருந்துள்ளது. இவற்றை நீக்கி தருமாறு பலமுறை கேட்டும் அதனை செய்து தர கட்டுமான நிறுவனம் ஒப்புக்கொள்ளவில்லை.

இதனால் வேறு வழியின்றி, செலுத்திய ரூ 54,50,000/- ஐ  திரும்ப வழங்குமாறு கட்டுமான நிறுவனத்தை சியாமளா கேட்டுக் கொண்டுள்ளார். ஆனால், ரூ 29,72,000/- ஐ  பிடித்தம் செய்து கொண்டு மீதத்தொகை ரூ 24,78,388/- ஐ  மட்டுமே கட்டுமான நிறுவனம் அவருக்கு திரும்ப வழங்கியுள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த சியாமளா கடந்த 2015 ஆம் ஆண்டில் தெலுங்கானா மாநில நுகர்வோர்   ஆணையத்தில் கட்டுமான நிறுவனத்தின் மீது வழக்கு (Consumer Complaint 36 of 2023) தாக்கல் செய்தார். இதனை விசாரித்த மாநில நுகர்வோர் ஆணையம் கடந்த 2022 அக்டோபர் 26 ஆம் தேதியில் வழங்கிய தீர்ப்பில் கட்டுமான நிறுவனம் வாடிக்கையாளருக்கு ரூ 25,66,136/- திருப்பித் தருவதோடு அதற்கு வட்டியும் இழப்பீடாக ரூ 50,000/- மற்றும் வழக்கின் செலவு தொகை ரூ 25,000/- வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டது.

மாநில நுகர்வோர் குறைதீர் ஆணையத்தின் தீர்ப்பை எதிர்த்து கட்டுமான நிறுவனம் தேசிய நுகர்வோர்  ஆணையத்தில் மேல்முறையீடு (First Appeal 422 of 2023) தாக்கல் செய்தது. இந்த மேல்முறையீட்டை விசாரித்த தேசிய நுகர்வோர் ஆணையம் கடந்த 2024 செப்டம்பர் 9ஆம் தேதி அன்று தீர்ப்பு வழங்கியுள்ளது. கட்டுமான நிறுவனத்துக்கு வீட்டை முன்பதிவு செய்யும் போது சியாமளாதேவி செலுத்திய ரூ 4,50,000/- மட்டுமே கட்டுமான நிறுவனம் பிடித்தம் செய்து கொள்ள வேண்டும் என்றும் சியாமளா செலுத்திய மீத ரூபாய் 50 லட்சத்தில் அவருக்கு வழங்கப்பட்ட தொகை போக இன்னும் ரூ 25,66,136/- ஐ   பணம் செலுத்தப்படும் நாள் வரை ஆண்டொன்றுக்கு 9 சதவீத வட்டியுடன் அவருக்கு கட்டுமான நிறுவனம் வழங்க வேண்டும் என்றும் தேசிய நுகர்வோர்  ஆணையம் கட்டுமான நிறுவனத்திற்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.

வீட்டை வாங்க முன்பதிவு செய்துவிட்டு அதனை ரத்து செய்யும்போது வாடிக்கையாளர் செலுத்திய தொகையில் 10% தொகைக்கும் மேல் கட்டுமான நிறுவனங்கள் பிடித்தம் செய்து செய்து கொள்வதும் வீடு வாங்கும் முன்பதிவு ரத்து செய்துவிட்டு திரும்ப பணத்தை கேட்கும் போது கட்டாத வீட்டுக்கு செலுத்தியுள்ள தொகையில் ஜிஎஸ்டி வரி பிடித்தம் செய்து கொள்வதும் நேர்மையற்ற வணிக நடைமுறை என்று நுகர்வோர் தேசிய நுகர்வோர் ஆணையம் தீர்ப்பில் தெரிவித்துள்ளது.

நுகர்வோர் பூங்கா
நுகர்வோர் பூங்கா
நுகர்வோர் பூங்காவின் படைப்பு

தொடர்புடைய கட்டுரைகள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -Central Learning campus

சமீபத்திய கட்டுரைகள்