விலை உயர்ந்த காலணிகளை விற்பனை செய்யும் குஸ்ஸி ஷூஸ் என்ற நிறுவனம் இத்தாலி நாட்டை சேர்ந்ததாகும். இந்த நிறுவனத்தின் விற்பனை மையங்கள் மும்பையில் உள்ளன. மும்பையில் உள்ள குஸ்ஸி ஷூஸ் நிறுவன விற்பனையகம் ஒன்றுக்கு கடந்த 2025 மார்ச் 6 அன்று, காலணிகளை வாங்க மும்பையில் வழக்கறிஞராக பணியாற்றும் அலி காஷிப் கான் தேஷ்முக் சென்றுள்ளார். தமக்கு பிடித்தமான ஒரு ஜோடி ஷூவை தேர்வு செய்து ரூ 75,500/- செலுத்தி வாங்கியுள்ளார்.
வாங்கிய ஷூக்களை உடனே காலில் மாட்டி பயன்படுத்த தொடங்கியுள்ளார் தேஷ்முக். ஒரு மணி நேரத்துக்குள்ளாகவே இரண்டு காலுக்கும் வழங்கப்பட்ட ஒவ்வொரு ஷூக்கும் இடையில் சற்று உயர வேறுபாடு இருப்பதை கண்டறிந்ததுள்ளார். இந்த பிரச்சனை காரணமாக தடுமாறி பொது இடத்திற்கு கீழே விழுந்துள்ளார். உடனடியாக ஷூக்களை வாங்கிய குஸ்ஸி ஷூஸ் நிறுவன விற்பனை நிலையத்திற்கு அவர் சென்று பிரச்சனையை தெரிவித்துள்ளார். ஒருமுறை விற்பனை செய்யப்பட்டு விட்டால் அதில் உள்ள பிரச்சனைகளை சரி செய்ய தங்களது நிறுவனத்தின் மற்றொரு கடைக்கு செல்ல வேண்டும் என்று விற்பனையாளர் தெரிவித்துள்ளார். இதனால் இதனால் விற்பனையாளர் தெரிவித்தபடி நிறுவனத்தின் மற்றொரு கடைக்கு தேஷ்முக் சென்றுள்ளார்.
ஒருமுறை பணம் செலுத்தி பொருளை வாங்கி விட்டால் பொருளை திரும்ப கொடுத்து பணத்தை பெற இயலாது என்றும் அதற்குரிய வேறு பொருளைத் தான் வாங்க வேண்டும் என்றும் அங்கிருந்த விற்பனையாளர் தெரிவித்துள்ளார். வாங்கிய ஷூ வகை (same model) இல்லாததால் வேறு ஒன்றை தேர்வு செய்யுமாறு விற்பனையாளர் தெரிவித்துள்ளார். வேறு ஒரு ஷூவை தேர்வு செய்த போது அதன் விலை அதிகமாக இருந்தது இதனால் வேறு வழி இன்றி மீண்டும் ரூ 9,500 /-செலுத்தி உள்ளார் தேஷ்முக்.
குஸ்ஸி நிறுவனத்தின் கடையில் இருந்த புகார் பதிவேட்டில் தம் விலைக்கு வாங்கிய ஷூக்கள் இரண்டுக்கும் இடையே உயர வித்தியாசம் இருந்ததை பதிவு செய்துள்ளார் தேஷ்முக். ஷூக்கள் ஆய்வுக்குப் பிறகு இரண்டு காலணிகளுக்கும் இடையே சிறிய உயர வித்தியாசம் இருந்ததாக குஸ்ஸி நிறுவனம் தேஷ்முக்கிற்கு பதில் வழங்கியுள்ளது.
இந்த சம்பவம் உடல் ரீதியான வலியை மட்டுமல்ல, மன ரீதியான வேதனையையும், பொது அவமானத்தையும், நம்பிக்கை இழப்பையும் ஏற்படுத்தியது என்றும் குஸ்ஸி நிறுவனத்தின் சேவை குறைபாடு, நியாயமற்ற வர்த்தக நடைமுறை போன்ற செயல்களுக்கு அந்த நிறுவனம் தமக்கு ரூபாய் ஒரு கோடியே 14 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் மும்பை தெற்கு மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில் குஸ்ஸி நிறுவனம் மீது வழக்கறிஞர் தேஷ்முக் வழக்கு தாக்கல் செய்துள்ளார். வழக்கை விசாரணைக்கு ஏற்றுக் கொண்ட நுகர்வோர் நீதிமன்றம் ஷூவை விற்ற நிறுவனத்திற்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
தவறான ரத்த பரிசோதனை அறிக்கை வழங்கிய லேப் பாதிக்கப்பட்டவருக்கு 3.5 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு
புது தில்லியில் கைலாஷ் காலனியில் வசித்து வருபவர் இந்தர் பிரகாஷ் வாத்வா. கடந்த 2011 மே 16 அன்று தனது மருத்துவர் பரிந்துரைத்ததால் ரத்தப் பரிசோதனைக்காக புதுடில்லி ரோகிணியில் உள்ள டாக்டர் லால்பத் லேப்ஸ் என்ற ஆய்வகத்துக்கு சென்றுள்ளார். யூரியா, கிரியேட்டினின் சீரம், அல்கலைன் பாஸ்பேடேஸ் மற்றும் பாஸ்பரஸ் சீரம்ஆகியவற்றின் அளவுகள் சராசரிக்கு மிகுதியாக இருப்பதாக லால்பத் லேப்ஸ் ஆய்வக அறிக்கை தரப்பட்டுள்ளது.
டாக்டர் லால்பத் லேப்ஸ் வழங்கிய அறிக்கையை செய்து கொள்ள ரத்தப் பரிசோதனைக்கு மேக்ஸ் ஹெல்த்கேர் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை ஆய்வகத்தை அணுகியுள்ளார் இந்தர் பிரகாஷ் வாத்வா. இந்த மருத்துவமனை ஆய்வகத்தில் வழங்கப்பட்ட அறிக்கையில் மூலம் அவருக்கு எவ்வித பிரச்சனையும் இல்லை என்றும் முந்தைய அறிக்கையில் தெரிவிக்கப்பட்ட விவரங்கள் தவறானது என்றும் அவருக்கு தெரியவந்துள்ளது.
பரிசோதனை செய்து கொள்வதற்காக ஏற்பட்ட சிரமங்கள். நேர விரையம், அலைச்சல் மற்றும் மன உளைச்சல் உள்ளிட்ட சிரமங்களுக்காக தவறான பரிசோதனை அறிக்கை வழங்கிய ஆய்வகம் மீது மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளார்.
வழக்கை விசாரித்த மாவட்ட நுகர்வோர் நீதிமன்றம் கடந்த 2014 ஆகஸ்ட் 4 அன்று தீர்ப்பு வழங்கியது. இந்த தீர்ப்பில் தவறாக பரிசோதனை அறிக்கை வழங்கிய ஆய்வகம் ரூபாய் மூன்று லட்சத்து 50 ஆயிரத்தை வழக்கு தாக்கல் செய்தவருக்கு வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டது. இதனை எதிர்த்து ஆய்வகம் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டை (FA/984/2014) விசாரணைக்கு பின்னர் கடந்த 2025 மே 26 அன்று தில்லி மாநில நுகர்வோர் ஆணையம் தள்ளுபடி செய்துள்ளது.
நுகர்வோர் பூங்கா (The Consumer Park) கருத்து: பாதிக்கப்பட்ட நுகர்வோர் நீதியை பெற 14 ஆண்டுகளா?.