பெங்களூரு மின்சார விநியோக நிறுவனத்தின் மூத்த அதிகாரி மீது முதல் கட்ட விசாரணை இல்லாமல் முதல் தகவல் அறிக்கை (எஃப்ஐஆர்-FIR: First Information Report) பதிவு செய்தது தவறு எனக் கூறி முதல் தகவல் அறிக்கையை ரத்து செய்த உயர் நீதிமன்ற உத்தரவை ரத்து செய்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
2007 ஆம் ஆண்டு கர்நாடக மின் பரிமாற்றக் கழக லிமிடெட் (KPTCL) -ல் பணியில் சேர்ந்த என். சுதாகர் ரெட்டி பதவி உயர்வு பெற்று பெங்களூரு மின்சார விநியோக நிறுவனத்தில் (BESCOM) துணை பொது மேலாளர் (விஜிலென்ஸ்)/செயல்பாட்டுப் பொறியாளர் (மின்சாரம்) ஆக நியமனம் செய்யப்பட்டவர் ஆவார். ₹3.81 கோடி மதிப்புள்ள சொத்துக்களை வருமானத்தை விட கூடுதலாக பெற்றுள்ளதாக இவர் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது அவரது அறியப்பட்ட வருமான ஆதாரங்களை விட 90.72% அதிகமாக இருந்தது (disproportionate assets).
(தொடர்ச்சி கீழே உள்ள அட்டவணை செய்திகளுக்கு கீழ்)


இந்தக் குற்றச்சாட்டுகளை விவரிக்கும் ஒரு ஆதாரத் தகவல் அறிக்கையை கர்நாடக லோக்ஆயுக்தாவின் (Lokayuktha) காவல் ஆய்வாளர் நவம்பர் 10, 2023 அன்று சமர்ப்பித்தார். கர்நாடக லோக்ஆயுக்தா காவல் கண்காணிப்பாளர் ஆதாரத் தகவல் அறிக்கையை மதிப்பாய்வு செய்துள்ளார். டிசம்பர் 4, 2023 அன்று ஒரு உத்தரவைப் பிறப்பித்தார், ஊழல் தடுப்புச் சட்டம், 1988, பிரிவுகள் 13(1)(b), 13(2), மற்றும் 12 இன் கீழ் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து விசாரணையைத் தொடங்குமாறு மாநில அரசின் காவல்துறை கண்காணிப்பாளருக்கு லோக் ஆயுக்தா காவல் கண்காணிப்பாளரால் உத்தரவிடப்பட்டது.
தன் மீது பதியப்பட்ட முதல் தகவல் அறிக்கையை ரத்து செய்யுமாறு, குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் (Cr..PC.,) பிரிவு 482 -ன் கீழ், நடவடிக்கைகளை கர்நாடக உயர் நீதிமன்றத்தை அணுகினார் என். சுதாகர் ரெட்டி. முதற்கட்ட விசாரணை இல்லாததால் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்தது செல்லாது என்று கூறி, மார்ச் 4, 2024 அன்று உயர் நீதிமன்றம் (High Court) தீர்ப்பு வழங்கியது. கர்நாடக உயர் நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து கர்நாடக மாநில அரசு உச்ச நீதிமன்றத்தில் (supreme Court) மேல்முறையீடு செய்தது. இந்த வழக்கில் கடந்த 2025 பிப்ரவரி 17 அன்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்வதற்கு முன் முதற்கட்ட விசாரணை கட்டாயமா? முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய உத்தரவிட்டு விசாரணைக்கு அங்கீகாரம் அளித்து காவல் கண்காணிப்பாளர் பிறப்பித்த உத்தரவு சட்டப்பூர்வமாக நிலை நிற்கத்தக்கதா? என்ற கேள்விகளுக்கான பதில்களை உச்ச நீதிமன்றம் தீர்ப்பில் வழங்கியுள்ளது.
ஒவ்வொரு ஊழல் வழக்கிலும் முதற்கட்ட விசாரணை கட்டாயமில்லை என்றும் நன்கு ஆவணப்படுத்தப்பட்ட ஆதாரத் தகவல் அறிக்கை முதல் தகவல் அறிக்கை பதிவு செய்வதற்கு போதுமானது என்றும் உச்ச நீதிமன்றம் தீர்ப்பில் தெரிவித்துள்ளது. ஊழல் தடுப்புச் ஊழல் தடுப்புச் சட்டத்தின் நோக்கம் ஊழல் வழக்குகளை விரைவாக விசாரித்து வழக்குத் தொடர உதவுவதாகும் என்றும் சட்ட அமலாக்க முகமைகள் மீது தேவையற்ற நடைமுறை தடைகளை விதிப்பது ஊழல் அதிகாரிகளை ஆய்வு செய்வதிலிருந்து பாதுகாக்கும் அபாயம் உள்ளது என்றும் உச்ச நீதிமன்றம் தீர்ப்பில் தெரிவித்துள்ளது.
நுகர்வோர் பூங்கா (The Consumer Park) கருத்து: கர்நாடகா மாநிலம் -எதிர்- டி.என். சுதாகர் ரெட்டி, குற்றவியல் மேல்முறையீட்டு எண். 5001 ஆஃப் 2024 என்ற வழக்கில் வழங்கப்பட்டுள்ள உச்ச நீதிமன்ற தீர்ப்பு ஊழல் தடுப்பு சட்டத்தை முன்னெடுத்துச் செல்லக்கூடிய முன்மாதிரி தீர்ப்பாகும்.
