பிச்சை தொழில் கார்ப்பரேட் நிறுவனம் போல செய்யும் குற்றவாளிகளால் பிச்சை தொழிலில் ஈடுபடுத்துவதற்காக குழந்தைகளும் நொடிந்து போன மனிதர்களும் கடத்தப்படுகிறார்கள். கடத்தப்படும் மனிதர்களை கொடுமைப்படுத்தி கட்டுப்பாட்டுக்குள் வைத்து பிச்சை தொழில் நடத்தப்படுகிறது. பிச்சை எடுக்கும் பணத்தை பிடுங்கிக் கொண்டு சொற்ப சோறும் வாழத் தகுதியற்ற தங்கும் இடமும் அவர்களுக்கு வழங்கப்படுகிறது இதில் வேறு ஒவ்வொரு பிச்சைக்காரர்களும் தினமும் குறைந்தது இவ்வளவு பணத்தை வசூல் செய்ய வேண்டும் என்று இலக்கு நிர்ணயிக்கப்படுகிறது இல்லாவிட்டால் குறைவாக வசூல் செய்தவர்கள் தாக்குதலுக்கு உள்ளாக்கப்படுகிறார்கள். இங்கு சொல்லப்பட்டதை போன்று நிகழ்வுகளை சில திரைப்படங்கள் படம் பிடித்து காட்டியுள்ளன. ஆனால், சமூகத்தின் உண்மையை பிரதிபலிக்கும் திரைப்படங்களை இவை. இந்த சூழலில் வலைதளத்தில் படித்து பிடித்த கதை இங்கு பகிரப்படுகிறது.
இன்று என்னுடைய பிறந்த நாள். என் மனைவியும், குழந்தைகளும் விருந்தினர்களை வரவேற்பதில் சுறுசுறுப்பாக இருந்தார்கள். நண்பர்களும், உறவினர்கள் சிலரும் குடும்பத்தினருடன் வந்து இருந்தனர். குழந்தைகள் பலூன்களைப் பார்த்து மகிழ்ச்சியும் உற்சாகமும் அடைந்தார்கள். வண்ணமயமான நிறங்களில் பரிசுகள் பொதிந்துள்ள பைகள் சுற்றிலும் இருந்தன. மேசை அலங்கரிக்கப்பட்டு பெரிய கேக் வைக்கப்பட்டு இருந்தது.
பல ஆண்டுகளுக்கு முன்னால், என் நினைவுகள் சென்றன. நான் 12 அல்லது 13 வயது பையனாக இருந்தபோது நகரத்தில் உள்ள ஒரு மரத்தின் அடியில் உட்கார்ந்து இருப்பேன். என்னைக் கடந்து செல்பவர்களிடம் நான் பணம் வேண்டி பிச்சை கேட்பேன். மாலைக்குள், எனக்கும், என் அம்மாவுக்கும் உணவு அருந்த போதுமான அளவுக்கு பணம் சேர்ந்துவிடும்.
ஒரு நாள் ஒரு பெரிய மனிதர் அந்த வழியாகச் சென்றார். பட்டணத்திற்குப் புதியவர்போல தோன்றியது. நான் கைகளைக் கூப்பியவாறு அவரை நோக்கி ஓடினேன். கைகளைப் பரப்பி விரித்து வைத்து அவரிடம் பிச்சை கேட்டேன். பார்ப்பதற்கு பெரிய மனிதராக இருந்ததால் அவரிடம் இருந்து நல்ல தொகை வரும் என்று எதிர்பார்த்தேன். அவர் இருபது ரூபாயாவது தருவார் என்று நினைத்தேன். ஆனால், நான் கைகளை விரித்து வைத்து பிச்சை கேட்டது அவருக்குப் பிடிக்கவில்லை என்று அவரது முகம் வெளிப்படுத்தியது. இருந்தும், 5 ரூபாய் நாணயத்தை என் உள்ளங்கையில் வைத்தார்.
ஒரு நாள் அவர் கோபம் அடைந்து என்னைத் திட்டினார், “பிச்சை எடுப்பதற்கு நீ வெட்கப்படவில்லையா? நீ நன்றாகவும், ஆரோக்கியமாகவும் இருக்கிறாய்; நீ உழைத்து உன்னைப் பாதுகாத்துக் கொள்ளவேண்டும். உன்னைப் போல ஒவ்வொருவரும் பிச்சை எடுக்கத் தொடங்கினால், நம் நாட்டுக்காக யார் சம்பாதிப்பார்கள்? நம் நாட்டில் உள்ள எல்லா பிச்சைக்காரர்களும் உழைக்க ஆரம்பித்துவிட்டால் நமது நாட்டின் பொருளாதாரம் வளர்ந்துவிடும்.“
நான் மர நிழலில் உட்கார்ந்திருக்கலானேன். பெரிய மனிதரும் என்னைப் பார்த்துக்கொண்டே செல்வார். இப்பொழுது அவர் பணம் கொடுப்பதை நிறுத்திவிட்டார்; நானும் அவரை நோக்கி ஓடுவதை நிறுத்திவிட்டேன். ஒருநாள் அவராகவே என்னை நோக்கி வந்து அருகில் உட்கார்ந்தார். என்னை நலம் விசாரித்தார். அவர் நல்ல மனநிலையில் இருக்கிறார், எனக்கு ஐம்பது ரூபாய் கூட கொடுக்கக்கூடும் என்று நினைத்தேன். ஆனால் அதற்குப் பதிலாக என் கையில் ஒரு பார்சலைக் கொடுத்தார்.
பார்சலைத் திறந்தேன், ஒரு எடை பார்க்கும் கருவி இருந்தது. அவர் சொன்னார், “இனி நீ பிச்சை எடுக்கத் தேவை இல்லை. ஒரு பாயைப் போடு, இந்த கருவியை முன்னால் வைத்திடு. மக்கள் அவர்களாகவே வந்து அவர்கள் எடையைத் தெரிந்து கொள்வார்கள். உனக்கு 5 ரூபாய் தருவார்கள். நீ பிச்சை கேட்க வேண்டியது இல்லை. இந்த வேலையின் மூலமாக, உன்னை நீ, கவனித்துக் கொள்ளலாம்.“ எனது கண்களில் கண்ணீர் வழிந்தன.
அந்த மனிதர் தினமும் வந்து நான் என்ன செய்து கொண்டிருக்கிறேன், எவ்வளவு சம்பாதிக்கிறேன் என்று கேட்கத் தொடங்கினார். ”பணத்தை பாதுகாத்துக் கொள், உனது திருமண நேரத்தில் இது உதவியாக இருக்கும்” என்றார். நான் பணத்தை சேமிக்கத் தொடங்கினேன். அந்த சேமிப்பில், நான் ஒரு டீ கடையை ஆரம்பித்தேன். வியாபாரம் வளர்ந்தது. நான் ஒரு கௌரவமான வாழ்க்கையை வாழ ஆரம்பித்தேன்.
இன்று எனக்குத் தேவையானது எல்லாமே இருக்கிறது. ஒரு குடும்பம், நிறைய பணம், ஒரு கார், நல்ல நண்பர்கள் எல்லாம் இருக்கிறது. அனைவரும் பிறந்தநாள் வாழ்த்துப் பாடல் பாடும் குரலைக் கேட்டு நான் இந்த கணத்திற்குத் திரும்பினேன். மெழுகுவர்த்திகளை ஊதி அணைத்தேன். கேக்கை வெட்டினேன். அனைவரும் எனக்குப் பரிசுப் பொருட்களை வழங்கினார்கள். ஆனால் விலை மதிப்பற்ற ஒரு பரிசைப் பற்றியே ஞாபகப்படுத்திக் கொண்டு இருந்தேன். என்னை இன்று இந்த இடத்திற்குக் கொண்டு வந்து சேர்த்தது அந்தப் பரிசுதான்.
அந்த சிறந்த மனிதர் எங்கு இருக்கிறார் எனக்குத் தெரியாது. ஆனால், எங்கே இருந்தாலும், அவர் 100 பேர்களை வழி நடத்திக் கொண்டு இருப்பார். அவர்களுக்கு புதிய பாதையைக் காட்டிக் கொண்டு இருப்பார் என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன். நமது சகோதர, சகோதரிகளை ஊக்கம் அடையச் செய்வது நமது கடமையாகும். அதே சமயத்தில் நமது இரக்க குணத்தை பயன்படுத்திக் கொண்டு பிச்சைக்காரர்களை உருவாக்கும் அரக்கர்களை ஊக்கப்படுத்துவதும் கருணை என்ற பெயரில் நல்ல உடல் நிலையில் உள்ளவர்களுக்கு பிச்சை வழங்கி ஊக்கப்படுத்துவதும் தவறான சமூகத்தை உருவாக்கி விடும் என்பதில் ஐயமில்லை.